இலங்கை - மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று வியாழக்கிழமை ரினிடாட்டில் ஆரம்பமாகிறது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், கயானாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இரண்டாவது டெஸ்டிலும் வெற்றிபெற்று இத்தொடரை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் இலங்கை அணி இன்று மேற்கிந்திய அணியை சந்திக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை அணி வீரர்களே 2 ஆவது போட்டியிலும் பங்கேற்கிறார்கள். அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
இலங்கை அணி சிறந்த துடுப்பாட்ட வரிசையுடன் இந்தத் தொடரில் களமிறங்கியது போல் பந்து வீச்சிலும் வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றனர்.
கடந்த போட்டியை வெற்றி - தோல்வியின்றி முடிக்கக் கூடிய வாய்ப்பு மேற்கிந்திய அணிக்கு இருந்தபோதும் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் மேற்கிந்திய அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்திய அணியின் விபரம் நேற்று வரை அறிவிக்கப்படவில்லை. போட்டி ஆரம்பமாவதற்கு முன் இன்றே அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டியில் இலங்கை அணி பெற்ற வெற்றியின் மூலம், மேற்கிந்திய மண்ணில், முதல் வெற்றியைப் பெற்றது. அத்துடன், இன்று ஆரம்பமாகும் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றுமானால் அது இலங்கை அணிக்கு ஒரு சாதனையாகும்.
இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறுவோமென்ற நம்பிக்கையுடன் தாங்கள் இன்றைய போட்டியில் களமிறங்குவதாக இலங்கை அணிக் கப்டன் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.