*ஹசன் அலி தெரிவிப்பு
கடும்போக்காளர்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் மகிந்த அரசு சர்வகட்சி மாநாட்டின் இறுதித் தீர்வு கிடைப்பதற்கு முன் இந்தியாவின் அழுத்தத்திற்கும் உந்துதலுக்கும் அடிபணிந்து தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத தேர்தல் ஒன்றை நடத்த முன்வந்துள்ளமை தனக்குத்தானே வெட்டிக் கொண்ட புதைகுழியென்பதில் சந்தேகமில்லை என ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முதன்மை வேட்பாளருமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையில் மாகாண சபை வேட்பாளர் அப்துல்ரஸ்ஸாக் ஜவாதை ஆதரித்து நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எல்.சாஹுல் ஹமீத் (பள்ளிக்காக்கா) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம்களின் அடையாளமாக கொடியில் எந்தவிதமான சின்னமும் கிடையாது. இம்மாகாணத்தின் இரண்டு மாவட்டங்கள் அம்பாறை மற்றும் திருகோணமலை முஸ்லிம்களின் விகிதாசாரமே அதிகமாகக் காணப்படுகின்ற போதும் அதனை மறைத்து மகிந்த அரசு சிங்கள மேலாதிக்கத்திற்குத் துணைபோய்க் கொண்டிருக்கின்றது.
எமது மாபெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப்பின் கனவான முஸ்லிம் தனி அலகு என்ற கோட்பாடு இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றாலேயே நிஜமாகும். இதற்கு மாற்றமாக அவரது மனைவியும் அமைச்சருமான பேரியல் அஷ்ரப் முஸ்லிம்களுக்கான தனியலகு கோட்பாடு தான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியில் மறுத்துப் பேசியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் மூலம் முகவரி தேடிக் கொண்ட இவர்கள் இன்று முஸ்லிம் சமூகத்தை மறந்து துரோகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக நடத்தப்படுகின்ற இத்தேர்தலில் தனது படைப்பலத்தைப் பயன்படுத்தி இத்தேர்தலில் எவ்வாறாயினும் வெற்றி பெற வேண்டும் என நினைத்து பலகோடி ரூபா செலவு செய்யப்படுகின்றன.
நமது சமூகம் பணத்திற்கு ஏமாறும் சமூகம் அல்ல என்பதை இத்தேர்தலில் மகிந்த அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
இன்னும் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும் நான் பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் தான் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கும் அதைக்கூட பொருட்படுத்தாமல் பாராளுமன்றப் பதவியெல்லாம் சமூகம் என்று வருகின்ற பொழுது காலுக்குக் கீழேதான் என்ற செய்தியை முஸ்லிம் சமூக விரோதிகளுக்கும் மகிந்தவின் கூஜா தூக்கிகளுக்கும் சொல்லிக் காண்பித்திருக்கின்றோம். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் 82 வீதமானவை முஸ்லிம் காங்கிரஸுக்கே அளிக்கப்பட்டது.
எத்தனை அமைச்சர்கள் இங்கு வந்தாலும் பரவாயில்லை. எதிர்வரும் 10 ஆம் திகதி முஸ்லிம் சமூகத்தின் இருப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.