*அம்பாறை ஐ.தே.க. வேட்பாளர் அப்துல் மஜீத்
உரிமைக்கும் சலுகைக்கும் இடையில் நடைபெறப் போகின்ற ஒரு தேர்தலாகவே நாங்கள் இந்தத் தேர்தலைப் பார்க்கின்றோம். இவ்வாறு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.
ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி மாநாடு கடந்த சனிக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு பேசும் போதே வேட்பாளர் அப்துல் மஜீத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்;
இனப்பிரச்சினையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒரு வரப்பிரசாதம் என்றே நான் கருதுகின்றேன்.
முஸ்லிம்கள் உரிமைகளைப் பெற வாக்களிக்க வேண்டுமா? அல்லது சலுகைகளைப் பெற வாக்களிக்க வேண்டுமா? என்பதை சரியாகத் தீர்மானிக்க வேண்டும்.
சலுகைகளுக்காக இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்களாயின் இந்த நாட்டில் உரிமைகளற்ற அடிமைச் சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவார்கள்.
கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தேசமாகும். நமது தேசத்தின் நிலங்களையும் எல்லைகளையும் பாதுகாக்க வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எல்லோரும் வாக்களிக்க வேண்டும்.
அரசியலில் கிடைக்கின்ற சலுகைக்காக அரசியல் செய்யவில்லை. நான் அரசியல் செய்வது சமூக சேவைக்காகத்தான். பொலிஸ் துறையில் உயர் பதவியில் இருந்த போது மக்களுக்கு எவ்வாறு சேவையாற்றினேன் என்பதை சொல்ல வேண்டியதில்லை. அது எல்லோருக்கும் தெரியும்.
ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு போதும் விலக மாட்டேன். நான் மரணிக்கும் வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலேதான் இருப்பேன். இக்கட்சியை விட்டு என்னை தூரப்படுத்த எந்த சக்தியாலும் முடியாது.
கிழக்கு மாகாண சிவில் பாதுகாப்பு இணைப்பதிகாரியாக 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டு வரைக்கும் கடமையாற்றிய போது தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்கு கடுமையாக உழைத்து அதில் வெற்றி கண்டிருக்கிறேன்.
கிழக்கு மாகாண சபை என்பது கிழக்கில் மலரப் போகும். மாநில அரசாகும். இது வெறுமனே அங்கத்தவர்கள் கூடிக் கலையும் ஒரு சபையல்ல. தமிழ் பேசும் மக்கள் கடந்த காலத்தில் எதிர் நோக்கிய துயரங்களை வைத்து பொதுமக்கள் அடையப் போகும் நன்மைகளை குறிக்கோளாக வைத்து செயற்படும் திட்டங்களை உள்ளடக்கியதாகும்.
இது தொடர்பாக ஓரளவு அனுபவம் உள்ளவன் என்ற வகையில் எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை இந்தத் தேர்தலில் தருவீர்கள் என நம்புகின்றேன் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் தலைமையில் நடைபெற்ற இவ்வெழுச்சி மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பசீர் சேகு தாவூத், மு.கா. செயலாளர் நாயகமும் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.ரி. ஹசன் அலி மற்றும் வேட்பாளர்களும் உரையாற்றினர். இக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.