மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்கள் எதிர்வரும் மேதினத்தினை முன்னிட்டு நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை மாவட்டங்களில் தத்தமது மேதினப் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினப் பொதுக்கூட்டமும் பேரணியும் அட்டன் நகரில் இடம்பெறவுள்ளது. இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொள்ளவுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் மேதினப் பொதுக்கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தலைமையில் பண்டாரவளை நகரில் இடம்பெறவுள்ளது. தொழிலாளர் விடுதலை முன்னணி ஆசிரியர், விடுதலை முன்னணி என்பனவற்றில் மேதினப் பொதுக் கூட்டமும் பேரணியும் நானுஓயா நகரில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு டி.அய்யாத்துரை, மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சர் எஸ்.அருள்சாமி ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டமும் அதன் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் தலவாக்கலை நகரில் இடம்பெறவுள்ளது.
மேலக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்பனவற்றின் மேதினப் பொதுக் கூட்டம் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தலைமையில் பொகவந்தலாவை நகரில் இடம்பெறவுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினப் பொதுக்கூட்டம் அதன் தலைவரும் பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷ் தலைமையில் பதுளை நகரில் இடம்பெறவுள்ளது.
லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினப் பொதுக் கூட்டம் மாத்தளை நகரசபை மண்டபத்திலும் இலங்கைத் தேசிய தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் நாவலப்பிட்டி கிம்புல்பிட்டிய தோட்டத்திலும் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் மேதின நிகழ்வு தோட்ட வாரியாகவும் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட மேதின பிரார்த்தனை நிகழ்வொன்று அட்டன் ஷ்ரீ சிவசுப்பிரமணியம் தேவஸ்தானத்தில் இடம்பெறவுள்ளது.