தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலிருந்து ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் தமது அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு சார்பாக மு.க.அபுயூசூவ் என்பவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இன்று நாடெங்கிலும் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களுக்கும் காரியாலயங்களுக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பெயரால் இயங்கிக்கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பிரசன்னா இந்திரகுமார் என்ற ரெலோ உறுப்பினர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லையென ரெலோவின் ஆரம்ப கால உறுப்பினர்களும், மத்திய குழு உறுப்பினர் களும் தற்போது ஐரோப்பாவில் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்பினர்களும் ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் தலைமைக் குழுவினதோ, மத்திய குழுவினதோ, பொதுக் குழுவினதோ அங்கீகாரமின்றி, ரெலோவின் அங்கத்தவர்கள் சிலர் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைமையில் போட்டியிட்டதுடன் மட்டுமல்லாது, புலிகளை தமிழ் பேசும் மக்களின் ஏகப் பிரதி நிதிகளாகவும் ஏற்றுக் கொண்டதனையும் வெற்றி பெற்ற பாராளுமன்ற அங்கத்தவர்கள் ரெலோ ஸ்தாபனத்தையும் அதன் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் அதன் நன்மதிப்பையும் சீரழிக்கும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கிய காரணத்தையும் ஆராய்ந்த இந்தக் குழுவினர், இந்தச் சீரழிவுகள் அனைத்திற்கும் இந்த மக்கள் பிரதிநிதிகள் என இயங்கியவர்களே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் எனக் கருதி, அந்த பாராளுமன்ற பிரதிநிதிகளையும் இவ்வளவு சீரழிவுகளுக்கும் அவர்களுக்குத் துணை நின்ற கட்சி உறுப்பினர்களையும் ரெலோவிலிருந்து உடனடியாக நீக்குவதென்று இக்குழு ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றது.
தமிழ் பேசும் மக்களின் அபிலாசையான ஐக்கியப்பட்ட, சமதர்ம இலங்கைக்குள், இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணத்திலே தமிழ் பேசும் மக்களை பிரிக்கவும் பறிக்க முடியாத தேசிய ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக உறுதியாகவும் உண்மையாகவும் இயங்கு முகமாக தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு காரியாலயங்களை முழு வேகத்துடன் இயக்குவதற்கும் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் காரியாலயங்களை புனர் நிர்மாணம் செய்து புத்துயுரளித்து முழு வேகத்துடன் இயக்குவதற்கும் இந்தக் குழு ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றது.