நெடுந்தீவு கடற்றொழிலாளர்களின் ஜீவனோபாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக சிறுவர் பாதுகாப்பு நிதியம் அறுபத்திமூன்று இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டி வசதி கொண்ட நாற்பதடி நீளமான மீன்பிடி வள்ளமொன்றை இன்று புதன்கிழமை காலை நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கத்திடம் கையளிக்கவுள்ளது.
இந்த மீன்பிடிப் படகை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ், குறிகட்டுவான் இறங்கு துறையில் இடம்பெறும் வைபவமொன்றில் நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளிடம் கையளிப்பார்.
கொழும்பு `டொக்கியாட்' நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த மீன்பிடிப் படகு கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டு இன்று கையளிக்கப்படுகின்றது.
இப்படகின் மூலம் நெடுந்தீவில் பிடிக்கப்படும் கடலுணவுப் பொருட்களை நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் யாழ்ப்பாணம் சந்தைக்கு எடுத்துவந்து சந்தைப்படுத்த வசதி கிட்டியுள்ளது.
சிறுவர் நிதியத்தால் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தால் நெடுந்தீவில் வாழும் ஆயிரத்தி ஐந்நூறு கடற்றொழில் குடும்பங்களின் ஜீவனோபாயம் மேன்மையடையவும் அவர்களுடைய சிறார்கள் ஐந்நூறு பேர்வரை நன்மையடைவார்கள் எனவும் சிறுவர் நிதிய யாழ்.மாவட்ட முகாமையாளர் விக்ரர் மொஸ்சஸ் தெரிவித்தார்.
இத்திட்டத்துக்கான நிதியை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் சிபார்சுக்கமைய கடந்த வருடமே ஒதுக்கப்பட்டபோதும் நிர்மாணிக்கப்பட்ட மீன்பிடிப்படகை எடுத்துவருவதில் நிலவிய தாமத்தால் இவ்வருடமே வழங்கப்படுகின்றது.
இப்படகில் மூன்று மெற்றிக்தொன் கடலுணவுப் பொருட்களை குளிரூட்டும் களஞ்சிய வசதியுண்டு.
மீன்பிடிப் படகின் செயற்பாடுகள் வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதியின் கட்டுப்பாடுகளுக்கு அமைய கடல் பயண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க அதிபரும் சில கட்டுப்பாடுகளை நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு விதித்துள்ளார்.