விடுதலைப் புலிகளின் நடவடிக்கை தொடர்பாக பிரிட்டனில் நடைபெறும் விசாரணைகளுக்காக லண்டனிலும் வேல்ஸிலும் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனுக்கு தென்மேற்கே வேல்ஸிலுள்ள மிற்சாம் புதிய நகரில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும், சூரேயிலும் நேற்று அதிகாலை ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார் நடத்திய தேடுதலின்போதே இந்த மூவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேல்ஸ் புதிய நகரில் 39 வயது மற்றும் 46 வயதான இருவரும் சூரேயில் 33 வயதான ஒருவரும், தரகுப்பணம் அறவீடு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைக்கான ஆயத்த வேலை அல்லது ஊக்குவிப்புத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டதாக ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
இது அல்ஹைடா அமைப்பினரின் செயற்பாடுகள் போன்ற நடவடிக்கையோ அல்லது பயங்கரவாதத்தை தூண்டுமொரு செயலோ அல்ல. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதவளிப்பதுடன் தொடர்பு பட்டதும், ஆயுதக்கொள்வனவு மற்றும் நிதிசேகரிப்பு போன்றதென பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கு நிதிசேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நீண்ட நாள் விசாரணையின் ஒரு பகுதியே இதுவெனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று கைது செய்யப்பட்ட மூவரும் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மத்திய லண்டனின் படிங்ரன்கிறீன் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.