* ஈரான் ஜனாதிபதி அஹமத் நிஜாத் கூறுகிறார்
எம்.ஏ.எம். நிலாம்
அணு பரிசோதனையை காட்டி தம்மை அடக்குவதற்கு மேற்குலகம் முயற்சித்ததாகவும் ஈரான் மக்கள் ஒன்றுபட்டு செயற்பட்டதால் அதிலிருந்து தங்களால் மீட்சிபெற முடிந்ததாகவும் தெரிவித்த ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நிஜாத் இலங்கை உட்பட உலக நாடுகள் இதனைப் பாடமாகக் கொள்வதன் மூலம் மேற்குலக ஆதிக்கச் சக்திகளிடமிருந்து மீட்சிபெற முடியுமெனவும் சுட்டிக்காட்டினார்.
அநீதியும் சண்டாளர்களும் உலகிலிருந்து தூக்கி எறியப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் மானுட நேயத்தின் அடிப்படையில் நாம் ஒன்றுபட்டால் புதிய உலகத்தை மலரச் செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ஈரான் இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி அஹமத் நிஜாத் நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் அனைத்து மதத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இவ்வைபவத்திற்கு மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமைதாங்கினார். மௌலானாவின் வரவேற்புரையையடுத்து ஈரான் ஜனாதிபதி உரையாற்றினார்.
உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பெரும் சவால்கள் பற்றியும் அவற்றை வெற்றிகொள்வதற்கான வழிவகை குறித்தும் ஈரான் ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
"ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாகொமைனியின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாமிய புரட்சியின் மூலம் நாம் உன்னதமான ஈரானை இன்று கட்டியெழுப்பியிருக்கின்றோம். சமீபகாலம் வரை மேற்குலகின் அநீதியும் சண்டாளர்களின் கயமைத்தனங்கள் தலைவிரித்தாடிய போதிலும் இன்று பொய் தோல்வி கண்டு சத்தியம் வெல்லக்கூடிய காலம் தொடங்கியுள்ளது. அநீதியும் சண்டாளர்களும் இல்லாமல் போக ஆரம்பித்துள்ளது.
மனித சமூகத்துக்கு எதிரான சக்திகளின் முயற்சிகள் சின்னாபின்னப்படத் தொடங்கியுள்ளன. இன்றுள்ள கேள்வி நாம் எவ்வாறு ஒற்றுமைப்பட்டு வாழ்வது என்பது தான். எமக்கிடையே அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு என்பன உறுதியாக இருக்கும் வரை எந்தச் சக்தியாலும் எம்மை அழிந்துவிட முடியாது. ஆயுதங்களுக்கு காணப்படும் சக்தியை விட பலமான சக்தி இந்த அன்பு, கருணை, சகிப்புத்தன்மைக்குக் காணப்படுகின்றது.
போர் மனநிலையில் தவறான வழியில் ஆயுதங்களைப் பாவித்து மனித கௌரவத்தை தரக்குறைவாக்கும் திட்டங்களை மேற்குலகம் மேற்கொள்கின்றது. இந்தப் பேராபத்திலிருந்து நாம் விமோசனமடைய வேண்டுமானால் அது எமது ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. எமக்கிடையே குழப்பங்களை உருவாக்கி மனித சமுதாயத்தை சின்னாபின்னப்படுத்துவதில் திட்டமிட்டுச் செயற்படும் மேற்குலகம் மதங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் மோதலை உருவாக்கும் மறைமுக பணியை மேற்கொண்டு வருகிறது.
அனைத்து மதங்களையும் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்களை சந்திக்கும் அரியதொரு வாய்ப்பு இந்த நாட்டில் எனக்குக் கிடைத்தது. இதனை நான் பெரும் பேறாகவே கருதுகின்றேன். இங்கு நான் மிக முக்கிய விடயங்கள் சிலவற்றை குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
இறைவனின் கருணையும் மனிதனின் பிறப்பும் முக்கியமானதாகும். மனித சமூகம் இறைவனின் கருணையை சரியாக புரிந்துகொண்டால் இன்று உலகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள், பிரச்சினைகள், அழிவுகள் இடம்பெற்றிருக்க முடியாது.
இருளிலிருந்து ஒளியை நோக்கிய பாதையில் கால்பதித்து அநியாயத்தை வீழ்த்தி நியாயத்தை வெற்றிகொள்ளச் செய்வதில் மதத் தலைவர்களுக்கு பெரும் பங்குண்டு.
ஆயுதங்களுக்குப் பதிலாக கருணை, அன்பு, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு என்பவற்றை நாம் கைகளில் எடுக்க வேண்டும். அதனூடாக இந்த உலகத்தையே எம்மால் வெற்றிகொள்ள முடியும். நாம் யாரையும் ஆதிக்கம் செய்ய முற்படவில்லை. எமது மக்களை தலைநிமிர்ந்து வாழ வைப்பதற்கே எம்மிடமிருக்கும் பலத்தைப் பயன்படுத்துகின்றோம். எமது நம்பிக்கை உறுதியாக இருக்கும் வரை எம்மை பலவீனப் படுத்த எந்தச் சக்தியாலும் முடியாது.
மனித சமுதாயத்தின் மீட்சிக்காக பாடுபடும் அனைவருக்கும் ஈரான் என்றும் பக்கத்துணையாக இருக்கும். உதவிக்கரங்களை நீட்டும்" எனவும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்தார்.