* பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுமாறு கோரிக்கை
மே 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியை சுகாதார அமைச்சு தேசிய நச்சுத் தடுப்பு வாரமாக (NATIONAL POISON PREVENTION WEEK) பிரகடனப்படுத்தியுள்ளது.
சுகாதார கல்விப் பணியகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடயங்களைத் தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ மேலும் தெரிவித்ததாவது;
இலங்கையில் நச்சுப்பொருள் பாவனை அதிகரித்து வருகிறது. இது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளைத் தோற்றுவிக்கும். எமது வாழ்வுக்கும் பாதகமாக அமையும். இதனை கவனத்திற் கொண்டு சுகாதார அமைச்சு தேசிய நச்சுத்தடுப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இப்பிரகடனம் வெற்றியளிப்பதற்கு ஊடகங்களின் பங்களிப்பு பிரதானமானது. பொதுமக்களுக்கு இது தொடர்பாக ஊடகங்கள் அறிவூட்டுவது அவசியமாகும்.
இலங்கையில் தற்கொலை செய்வோரில் பெண்களே முன்னணி வகிக்கின்றனர். அலரி விதையை உட்கொண்டே அதிகம்பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 20 வயதிற்கும் 29 வயதிற்குட்பட்டவர்களே தற்கொலையில் அதிகம் ஈடுபடுகின்றனர்.
அதேவேளை, இலங்கையில் நச்சுப் பாம்புகள் கடித்தும் பலர் உயிரிழக்கின்றனர். 1993 இல் பாம்புக் கடிக்கு 2 இலட்சத்து 66 ஆயிரம் பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 166 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 2005 ஆம் ஆண்டு 36 ஆயிரத்து 861 பேர் பாம்புக் கடிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 134 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் 2005 ஆம் ஆண்டு நஞ்சருந்திய நிலையில் 91 ஆயிரத்து 52 பேர் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆயிரத்து 785 பேர் மரணித்துள்ளனர்.
பாதிப்புக்குள்ளாகியவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவதிலுள்ள தாமதமே அவரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைகிறது. போதிய விழிப்புணர்வின்மையும் இதற்குக் காரணமாக அமைகிறது. எனவே, நச்சுப் பாவனை மற்றும் விஷஜந்துக்கள் குறித்து போதிய விழிப்புணர்வுடன் செயற்படுவது மிகப்பிரதானமானதாகும்.
இதன்பொருட்டே சுகாதார அமைச்சு மே 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான ஒரு வாரத்தை தேசிய நஞ்சு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் கருப்பொருள் `கிருமிநாசினி தாக்கத்திலிருந்து இலங்கையைப் பாதுகாப்பது என்பதாகும்' என்றார்.
இங்கு மனோதத்துவ ஆலோசகரும் வைத்தியருமான நீல் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்;
தற்கொலைக்கு முயன்று தோல்வி கண்டவர்கள் குறித்து ஊடகங்கள் வெளியிடும் தகவல்களினால் அவர்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகின்றனர். தற்கொலையைத் தூண்டும் செயற்பாடுகளில் எவ்வகையிலும் ஊடகங்கள் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, சமூகத்தாக்கங்களில் ஒன்றான தற்கொலையைத் தடுக்க ஊடகப் பங்களிப்பு அவசியமென்றார்.