வவுனியாவில் கடந்த 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் வைத்து இராணுவ சீருடையணிந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்த செல்வராசா மணிவண்ணன் என்ற (17 வயது) மாணவன் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.
வவுனியா கண்டி வீதியில் உள்ள தமிழ் மகா வித்தியாலயம் அருகில் வைத்து இம்மாணவன் மூடிய வாகனத்தில் கொண்டுவரப்பட்டு விடுவிக்கப்பட்டார் எனப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
கண்டி- திரித்துவக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் இம்மாணவன் விடுமுறையில் சூசைப்பிள்ளையார் குளத்தில் உள்ள வீட்டில் பெற்றோருடன் தங்கியிருந்தபோது பவள் வாகனத்தில் வந்த இராணுவ சீருடையணிந்தவர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறி கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் வவுனியா பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறையிட்டிருந்தனர்.
இது தொடர்பாக வவுனியா நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து திங்கட்கிழமை விசாரணை நடைபெற்றது.
பவள் வாகனத்தில் வந்தவர்களால் இம்மாணவன் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வவுனியாவில் பவள் வாகனம் உள்ள 211 ஆவது படைப்பிரிவான இராணுவ தலைமையகம், தாண்டிக்குளம் முகாம், நகரப்பகுதி முகாம் என்பவற்றின் அதிகாரிகள் நீதிமன்றம் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரியும் இது தொடர்பாக 211 ஆவது படைப்பிரிவில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையிலேயே நேற்று இந்த மாணவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.