*மனைவி உட்பட மூவர் படுகாயம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஒருவரது வீட்டின் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈழவர் ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஆரோக்கியநாதன் மரியதாஸ் என்பவரது, புன்னைச்சோலையிலுள்ள வீட்டின் மீதே திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் நடைபெற்ற போது அங்கு வேட்பாளர் இல்லாத போதும் குண்டுத் தாக்குதலில் அவரது மனைவியான எம்.இராசாத்தி (35 வயது), மனைவியின் தாயாரான ஏ.ஞானம்மா (55 வயது)ஏ.தியாகு (22 வயது) என்பவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஆயுதக் குழுவொன்றின் மிரட்டலுக்குள்ளானதுடன் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் ஒருவரது வீட்டிற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த, அவரது பட `கட்அவுட்' அகற்றிச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவை குறித்தெல்லாம் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.