*கிழக்கு நிர்வாகத்தை கைப்பற்றியவுடன் இந்திய அரசுடன் பேச்சு; கிண்ணியாவில் ரணில்
சம்பூரிலிருந்து 17ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்றதெனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை ஐ.தே.க.- மு.கா.கூட்டணி கைப்பற்றியவுடன் இது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு விமோசனம் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
மக்கள் சந்தேகமற்ற முறையில் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே ஐ.தே.க.-மு.கா. கூட்டின் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் பிரசாரக் கூட்டம் மாலை கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்றபோது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட ஐ.தே.க. வேட்பாளருமான எம்.ஏ.எம்.மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட பலர் உரையாற்றினர்.
ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது;
"மக்களுக்கு நீண்ட சமாதானத்தையும், சௌபாக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காகவே நாங்கள் இம்மாகாண சபைத்தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றோம்.
இந்த அரசு மக்களை வாக்களிக்காமல் இருக்க பயமுறுத்துகிறது. கடிதங்கள் மூலமும், நேரடியாகவும் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இதற்கு இடங்கொடுக்க முடியாது. எனவே, மக்களை இந்த அராஜகத்தில் இருந்து விடுவிக்க வேண்டியுள்ளது.
இதற்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு என்னோடு இணைந்து செயற்படும் ரவூப் ஹக்கீமுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிழக்கு மக்களை ஆயுத அரசியல் கலாசாரத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். இதற்கு மக்களின் ஆணை எங்களுக்கு வேண்டும். அதற்காகவே நாங்கள் இணைந்து வந்துள்ளோம்.
கிழக்கு மாகாண சபையை நாங்கள் கைப்பற்றியவுடன் பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்குமாறு கோரும் பிரேரணையையே முதலாவதாக நிறைவேற்றவுள்ளோம். பிள்ளையான் குழு எப்போது ஆயுதத்தைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்துக்கு வருகின்றதோ அப்போது தான் அதனை அரசியல் கட்சியாக ஏற்றுக் கொள்வோம்.
இன்று சம்பூர் பகுதியிலுள்ள 17 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கு பாதுகாப்பு காரணம் கூறப்படுகின்றது. இது பொருத்தமற்றதாகும். பாதுகாப்பு பிரச்சினையிருந்தால் அங்கு ஒரு முகாம் அமைத்திருக்கலாமே தவிர மக்களை வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை.
கிழக்கு மாகாண சபையை வென்றவுடன் நாங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையம் குறித்து இந்திய அரசுடன் பேசுவோம். மக்களுக்கு விமோசனம் பெற்றுத் தருவோம்.
எமது அரசு காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ரவூப் ஹக்கீமால் திறந்து வைக்கப்பட்ட அஷ்ரப் இறங்குதுறை, ஐ.ஓ.சி. ஒப்பந்தம் ஊடாக செய்யப்பட்ட எண்ணெய் குதம் அபிவிருத்தி என்பன முக்கியமானவையாகும்.
நான் பிரதமராக இருந்த காலத்தில் தான் கிண்ணியா பாலம், பிரதான வீதி அபிவிருத்தி என்பவற்றுக்கான பேச்சுவார்த்தை சவூதி அரேபிய அரசாங்கத்துடன் செய்யப்பட்டது.
2004 இல் எமது ஆட்சிக் கலைக்கப்பட்டதால் அவ்வேலைகள் இன்றுவரை தாமதமாக உள்ளன. எமது ஆட்சிகலைக்கப்படாமல் இருந்திருந்தால் எப்போதோ இவ்வேலைகள் முடிந்திருக்கும்.
சமாதானம் தொடர்பாக எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இந்த அரசு நாளுக்கு நாள் புதிய கருத்துக்களைக் கூறி வருகின்றது. இதனால் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் சகல மக்களுக்கும் சம அந்தஸ்துள்ள நிரந்தர சமாதானத்தை உருவாக்குவோம். அதற்கான வேலைத் திட்டம் எம்மிடம் இருக்கிறது.
யுத்தம், கடள்கோளால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இன்னும் மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றனர். இவர்களை மீள் குடியேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.
இன்று மக்கள் நாளுக்கு நாள் பசி, பட்டினியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களை மீட்க வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது. அதனை மிகவும் சிறப்பாக நாம் செய்வோம்.
2002-2004 வரையான எமது ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு சுதந்திரமான வாழ்க்கையை ஏற்படுத்தினோம். சுதந்திரமாக தொழில் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தினோம். இன்று அவை முடக்கப்பட்டுள்ளன.
எனவே, மக்களை, ஜனநாயகத்தை, சமாதானத்தை இவையெல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையை வெற்றிபெறச் செய்ய அனைவரும் யானைக்கு வாக்களியுங்கள்.
அச்சுறுத்தல்களுக்குப் பயப்படவேண்டாம். என்ன இடர் வந்தாலும் தைரியமாக வாக்களிக்கச் செல்லுங்கள். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்" என்றார்.