* வேகமாக சென்ற வாகனம் மரத்தில் மோதியது
அம்பாறை அரலகங்வில பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா படுகாயமடைந்த அதேநேரம், களனி பிரதேச சபைத் தலைவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவர்களுடன் சென்ற மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை 4.45 மணியளவில் அரலகங்வில தெகியத்த கண்டிய கஜுவத்தை சந்தகலதன்னவில் 9ஆம் மைல் கல் பகுதியிலேயே இந்த வீதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் மேர்வின் சில்வா தனது சகாக்களுடன் தனது வாகனத்தில் மிக வேகமாக வந்து கொண்டிருந்த போதே, வீதி வளைவொன்றில் வாகனம் வேகமாகத் திரும்பிய போது வாகனம் வீதியை விட்டு விலகிச் சென்று மரமொன்றுடன் மோதியுள்ளது.
இதனால், அமைச்சரின் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன் அதனுள்ளிருந்த அமைச்சர் மேர்வின் சில்வா படுகாயமடைந்தார்.
அவருடன் சென்ற களனி பிரதேச சபைத்தலைவர் சீவலி கலனி திலக என்பவர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததுடன் பாதாள உலகக் குழுத்தலைவரான கடவத்த அமல் என்பவரும் மற்றொருவரும் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் கை முறிந்த நிலையிலும் காலில் படுகாயமடைந்த நிலையிலுமிருந்த அமைச்சர் மேர்வின் சில்வா விமானப் படை ஹெலிகொப்டர் மூலம் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.
இதேநேரம், படுகாயமடைந்த கடவத்த அமலும் மற்றவரும் உடனடியாக தெகியத்தகண்டிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் கடவத்த அமலின் நிலைமை மோசமாயிருந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்தில் உயிரிழந்த களனி பிரதேச சபைத் தலைவரது சடலம் தெகியத்தகண்டிய ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.