எம்.ஏ.எம். நிலாம்
தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜே.வி.பி. தலைமைத்துவத்துக்கு இன்று புதன்கிழமை நள்ளிரவு வரை காலக்கெடு விதித்திருக்கும் அதிருப்திக்குழு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தவறினால் நாளை மே தினத்தன்று புதிய அரசியல் அணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி ஆரம்பிக்கப்படுமானால் கட்சியிலிருந்து பெருமளவான ஆதரவாளர்கள் தனக்கு ஆதரவளிக்க முன் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்திய விஷேட செயதியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தனது முடிவை அறிவித்துள்ளார்.
ஜே.வி.பி.க்குள் தற்போது கட்சியை வளர்த்தெடுத்தவர்கள் மீது பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்சிக்குத் துரோகமிழைப்பவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். கட்சியை பாதுகாத்தவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு வெளியேற்றும் சதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிக்குள் நடக்கும் அதிகாரங்கள் செயற்பாடுகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
நியாயமான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை நாம் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்துள்ளோம். (இன்று) 30 ஆம் திகதி புதன்கிழமை வரை கட்சி மத்திய குழுவுக்கு கால அவகாசம் வழங்கியிருக்கின்றோம். சரியான பதில் கிட்டாது போனால் நாளை மே தினத்தன்று எமது புதிய அரசியல் பயணத்துக்கான அத்திபாரமிடப்படும்.
எனக்காக குரல் எழுப்பியதால் கட்சியில் விளக்கம் கோரப் பட்டிருக்கும் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் என்னோடு இணைந்து செயற்பட முன் வந்துள்ளனர். அதோடு ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றில் அதிருப்தி கொண்டிருக்கும் பலரும் எம்மோடு ஒன்றிணைய வருகின்றனர் எனவும் விமல் வீரவன்ச செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.