* காலநிலை சீர்கேடால் வெள்ளவாயா பயணம் ரத்து
எம்.ஏ.எம்.நிலாம்
இலங்கையிலுள்ள ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 1.2 பில்லியன் டொலர் செலவில் அபி விருத்தி செய்யும் திட்டத்தை ஈரான் ஜனாதிபதி மஹ்முத் அகமதிநிஜாத் நேற்று செவ்வாய்க்கிழமை வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
இந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அபிவிருத்தி திட்டத்துக்கு பெருந்தொகை நிதியை ஈரானே வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஈரான் ஜனாதிபதி அகமதி நிகாத்தும் கருங்காலி மரக்கன்றை நாட்டி அபி விருத்தித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்தனர்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது நாளாந்தம் 50 ஆயிரம் பரல் எண்ணெய்யே சுத்திகரிக்கபடுகிறது. ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 4 ஆண்டுகாலத்திட்டத்தின் பிரகாரம் தினமும் 1 இலட்சத்து 50 ஆயிரம் பரல் எண்ணெயை சுத்திகரிக்கமுடியும்.
இலங்கையின் எண்ணெய் தேவையில் 70 சதவீதமானவற்றை ஈரானே பூர்த்திசெய்கின்றது. இதனை மேம்படுத்த 700 மில்லியன் டொலர் உதவிவழங்குவதற்கு ஈரான் இணங்கியுள்ளதாக இந்த வைபவத்தில் கலந்துகொண்ட பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
இதன்மூலம் விமானசேவைக்கான எரிபொருள் மற்றும் தார் ஆகியவற்றின் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் பௌசி கூறினார்.
இது இவ்வாறிருக்க காலநிலை சீரின்மையால் உமாஓயாத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் ஈரான் ஜனாதிபதியால் நேற்று பங்கேற்கமுடியவில்லை. வெள்ளவாயாவில் உமாஓயா நீர்ப்பாசன திட்டம் 450 மில்லியன் டொலர் செலவில் நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இத்திட்டதை ஈரான் ஜனாதிபதி ஆரம்பித்துவைக்கவிருந்த போதும் அவருக்கு பதிலாக பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகளுடன் 15 பேரடங்கிய ஈரான் தூதுக்குழுவும் கலந்துகொண்டது.
உமா ஓயாத்திட்டம் நான்கு வருடங்களில் பூர்த்தியடைந்ததுடன் மேலும் 100 மெகாவாட் நீர்மின்சாரத்தை இலங்கை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று அதிகாரிகள் கூறினர்.
பாகிஸ்தானிலிருந்து நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகைதந்த ஈரானிய ஜனாதிபதி பத்திரிகையாளரை சந்திக்கவில்லை. ஆனாலும் அரசியல், கலாசார, பொருளாதார ரீதியிலான பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கு அகமதி நிஜாத் ஆர்வம் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் தெரிவித்தது.
அகமதி நிஜாத்தின் விஜயம் இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான விடயமென வர்ணிக்கப்படுகிறது. இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயமென ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.
தமது விஜயத்தை நிறைவு செய்துகொண்டு அகமதி நிஜாத் இந்தியாவுக்கு பயணமானார்.