முன்னொருபோதுமில்லாத அளவுக்கு சர்வதேச ரீதியில் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்திருக்கும் மோசமான நெருக்கடி நிலையை கையாள செயலணிக் குழுவொன்றை ஐ.நா. உருவாக்கவுள்ளது.
தனது முகவர் அமைப்புகள் மற்றும் உலக வங்கியுடன் இணைந்து இந்த செயலணிக்குழு இயங்குமென ஐ.நா. நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
`உலகில் உணவுப்பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துச் செல்கின்றன. இது பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் உலகின் நலிந்தவர்க்கத்தினருக்கு பாரிய நெருக்கடி உருவாகியுள்ளது. நகரப்பகுதியில் வாழும் வறியவர்களும் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்தச் சவாலானது பல பக்கவிளைவுகளை கொண்டுள்ளது. மிகவும் நலிந்தவர்க்கத்தினருக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பாரதூரமான தாக்கத்தை இது ஏற்படுத்துகின்றது என்று ஐ.நா. மேலும் குறிப்பிட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்தின் தலைநகரில் ஐ.நா. முகவரமைப்புகளின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஐ.நா. இந்த அறிக்கையை விடுத்திருக்கிறது.
உணவுப்பொருள் விலை அதிகரிப்பால் பட்டினி, கலவரங்கள், பதுக்கல் என்பன வறிய நாடுகளில் இடம்பெறுவதை தடுப்பதற்கான தீர்வுத்திட்டத்தை தயாரிக்கவே ஐ.நா. முகவரமைப்புக்களின் தலைவர்கள் சுவிட்சர்லாந்து சந்திப்பில் ஒன்றுகூடி ஆராய்ந்தனர்.
கோதுமை, அரிசி மற்றும் ஏனைய முக்கிய உணவுப் பொருட்களின் விலையதிகரிப்பால் உலக உணவு நிகழ்ச்சித்திட்டம் போன்ற உதவிவழங்கும் அமைப்புகளுக்கு கடும் நெருக்கடி தோன்றியுள்ளது. வறிய மற்றும் வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு உதவியளிக்க துரிதமாக நிதிவசதிகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிப்பதாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆபிரிக்காவுக்கு விவசாயத்துறைக்கான கடனை இரண்டுமடங்காக உலக வங்கி அதிகரிக்கவுள்ளது.
இதேவேளை, உணவு ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டாமென நாடுகளிடம் உலகவங்கித் தலைவர் சோலிக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் அழைப்பு விடுத்துள்ளனர்.