முகமாலை, கிளாலி பகுதிகளில் அரச படையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே மூண்ட பெரும் போர் நடவடிக்கைகள் ஓய்ந்திருந்த வேளையில் கடந்த 26 ஆம் திகதி வெலிஓயா பிரதேசத்தில் புலிகள் மீது அரசபடையினர் பெரும் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். வெலிஓயாப் பிரதேசத்தில் ஜானகபுர பகுதியிலுள்ள கிரிப்பண் வெவ மற்றும் அந்தணன் குளத்தை அண்டியுள்ள பிரதேசத்தில் வைத்து அரசபடையினர் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் மீது மேற் கொண்ட தீவிர தாக்குதலின் போது புலிகள் தரப்பில் 27 பேர் உயிரிழந்ததுடன், பெருந் தொகையினர் காயத்துக்கும் உள்ளாகினர்.
முகமாலைக்கு அடுத்து வடக்கில் வெலிஓயா பிரதேசத்தில் நிகழ்ந்த இந்த தீவிர மோதலில் படையினர் தரப்பில் 7 பேர் உயிரிழந்ததுடன், 13 படையினர் காயப்பட்டுமுள்ளனர். இவ்வாறு புலிகள் தரப்பில் 25 பேர் கொல்லப்பட்டிருப்பது முகமாலையில் புலிகளுக்கு ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான இழப்பைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட கூடுதல் உயிரிழப்பாகும். முகமாலை கிளாலியில் நிகழ்ந்த முன்னைய போரில் நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.