* தமிழ் மொழி மூலத்தில் முதலிடம் பெற்ற சாலினி கூறுகிறார்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தமற்ற சூழ்நிலை நிலவினால் அங்குள்ள மாணவர்களும் அகில இலங்கை ரீதியாக மேலும் பல சாதனைகளை நிலைநாட்டி வரலாறு படைப்பர்களென க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் முதலிடம் பெற்றுள்ள கல்முனை, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் சாலினி `தினக்குரல்'க்கு தெரிவித்தார்.
அவர் எமக்களித்த சிறு செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது;
" என்னுடைய குடும்பம் 5 பேரை கொண்டது. ஆஸ்துமா நோயினால் அப்பா இறந்து விட்டார். அம்மா இல்லத்தரசியாக உள்ளார். அண்ணா வெளிநாட்டிலும், அக்கா வீட்டிலும் உள்ளனர்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையிலும் 157 புள்ளிகள் பெற்று நான் சித்தியடைந்தேன். சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக சாதனை படைத்தமையிட்டு மிகுந்த சந்தோஷமடைகிறேன்.
எனது இந்த சாதனைக்கு என்னுடைய தாய், குடும்பத்தினர், அதிபர், ஆசிரியர்கள் ஆகியோருடன் எனது விடா முயற்சி, இலவசக் கல்வி நிலையங்கள், இறுதிநேர கருத்தரங்குகள் என்பனவும் காரணமாக இருந்தன.
உயிரியல் துறையில் மிகவுயர்ந்த நிலையை எட்டுவதே எனது இலட்சியமாகும்.
எதிர்வரும் காலங்களில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவ சகோதரர்களுக்கு நான் சில அறிவுரைகளை கூறவிரும்புகிறேன்.
அதாவது, அவர்கள் நூல் நிலையங்களை முழுமையாக உபயோகிப்பதுடன் ஆசிரியர்களை மதித்து கடந்தகால பரீட்சை வினா விடைத்தாள்கள் மீட்டிப்பார்ப்பதன் மூலம் சிறந்த அறிவு மற்றும் அனுபவத்தைப் பெற்று பரீட்சையில் சித்தியடைவதுடன் சாதனையையும் படைக்க முடியும்.
யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் ஆகியன வட,கிழக்கைப் பெரிதும் பாதித்துள்ளன. இவ்வாறான சூழ்நிலையிலும் வட, கிழக்கு மாணவர்கள் இம்முறை சாதாரண பரீட்சையில் சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளனர்.
உண்மையில் யுத்தமில்லாத ஒரு சூழ்நிலை வடகிழக்கில் நிலவுமாயின் இங்குள்ள மாணவர்களினாலும் அகில இலங்கை ரீதியாக மேலும், பல சாதனைகளைப் படைக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனது மகளின் சாதனை குறித்து தாயார் எஸ்.சந்திரா கூறுகையில்;
"மகள் இவ்வாறு சாதனை படைத்திருப்பது எனக்குப் பெரும் மகிழ்வாகவுள்ளது. சாலினி என்ன கஷ்டம் வந்தாலம் சிறந்தமுறையில் படிக்க வேண்டுமென மரணிக்கும் தருணத்தில் அவருடைய தந்தை கூறியிருந்தார். இன்று அவருடைய கனவின் ஒரு கட்டம் நிறைவேறியுள்ளது. பரீட்சைக் காலத்திலும் அதற்கு முன்னரும் சாலினியை படிக்குமாறு நாம் வற்புறுத்தாதபோதும் அவர் தனது சொந்த ஆர்வத்தில் படித்தார்" என்றார்.