உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமையினால் 21 கட்சிகளைச் சேர்ந்த 293 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நேபாள தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி அரசியல் நிர்ணயசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் சட்டத்தை உருவாக்கும் இந்த தேர்தலில் 21 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
தேர்தல் நாள் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், குடியுரிமைச் சான்றிதழை சமர்பிக்காத 227 பேரின் வேட்பு மனுக்களும் போட்டியிட தகுதியான வயதை பெற்றிருக்கவில்லை என்று 66 பேரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த புதன்கிழமைக்குள் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களைப் பற்றிய முழுவிவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் தங்களது விவரங்கள் குறித்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர்.