திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மீதான குற்றச்சாட்டு தவறானதெனவும் அவர் அமைதிக்கான தலைவரெனவும் தெரிவித்துள்ள அமெரிக்கா, சீனா அவருடன் பேச்சுகளை நடத்தவேண்டு மென வலியுறுத்தியுள்ளது.
சீனா கைப்பற்றிக் கொண்ட திபெத் நாட்டை விடுவிப்பதற்காக திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் திபெத் நாட்டின் தலைநகர் லாசாவில் முதலில் தொடங்கியது. பிறகு அது அருகில் உள்ள சிச்சுவான் உட்பட பல மாநிலங்களுக்கும் பரவியது. அத்துடன் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் வசிக்கும் திபெத்தியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை தலாய்லாமா தான் தூண்டிவிட்டார் என்று சீனா குற்றஞ்சாட்டியது. அத்துடன் காவி உடையில் உள்ள குள்ள நரி என்றும் வர்ணித்து உள்ளது. அவரது மாணவர்கள் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தவறானது என்று அமெரிக்காவின் புஷ் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபற்றி வெளிவிவகார செய்தி தொடர்பாளர் டாம் காசே நிருபர்களிடம் கூறியதாவது;
தாலய்லாமா அமைதிக்கான தலைவர். வன்முறையை ஆதரிக்காதவர் அவர் ஒரு தனி நபர். தன் சமுதாயத்தின் நன்மைக்காக மட்டுமே செயல்படுவர். சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதை தவிர வேறு எதையும் அவர் செய்யவிரும்பவில்லை. எனவே தலாய்லாமாவுடன் சீனா பேச்சுவார்தை நடத்த வேண்டும். போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.