நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் மற்றும் ஜோர்ஜியாவை இணைத்துக் கொள்வதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாடுகளுடனான உறவை தொடர்ந்தும் எவ்வாறு பேணுவது என்பது குறித்து நேட்டோ ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரோமானியாவில் நடைபெற்றுவரும் நேட்டோ உச்சி மாநாட்டில் எதிர்காலத்தில் இந்நாடுகளுடன் நெருங்கிய உறவை பேணுவதற்கு மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு சோவியற் குடியரசு நாடுகளையும் நேட்டோவில் இணைப்பதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் விடுத்திருந்த போதும் ஜேர்மனியும் பிரான்ஸும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னர் ஆப்கானுக்கு மேலதிக துருப்புகளை அனுப்பவுள்ளதை பிரான்ஸ் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய நாடுகள் பதற்றம் கூடிய பகுதிகளுக்கு படையினரை அனுப்பாவிட்டால் கந்தஹாரிலுள்ள தமது படைகளை விலக்கிக் கொள்ளப் போவதாக கனடா அச்சுறுத்தல் விடுத்திருந்ததைத் தொடர்ந்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் தலிபான்களுக்கெதிரான போருக்கு மேலதிக துருப்புகளையும் வளங்களையும் வழங்குவதற்கு முன்வரவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணும் இம் மாநாட்டில் வலியுறுத்துவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
நேட்டோவின் உறுப்புரிமைக்கான செயல் திட்டத்தில் உக்ரைனையும் ஜோர்ஜியாவையும் இணைப்பதற்கு புஷ் தனது பலமான ஆதரவை வெளிப்படுத்தியிருந்த போதும் குறிப்பிட்ட காலத்திற்கு மிகவும் முன்னதாக இந்நாடுகளுக்கு இவ் உறுப்புரிமை வழங்கப்படுவதாக கூறி ஜேர்மனியின் சான்ஸிலர் அஞ்செலா மார்கல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஜோர்ஜியாவுக்கும் உக்ரைனுக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் நேட்டோவின் உறுப்புரிமையை வழங்குவது தொடர்பில் நேட்டோ அதிகாரி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நாடுகளை நேட்டோவில் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யாவுக்கு இச்செய்தி வெற்றியைக் கொடுத்திருப்பதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.