* கடமை தவறியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
அநுராதபுரம் நிருபர்
அநுராதபுரம் வலயக்கல்விப் பணிமனைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட வடமத்திய மாகாண முதலமைச்சரும் மாகாண கல்வியமைச்சருமான பேர்டி பிரேமலால் திசாநாயக்க அங்குள்ள நிர்வாகச் சீர்கேடுகள் பலவற்றையும் நேரடியாகவே பார்த்து அறிந்து கொண்டுள்ளார்.
அநுராதபுரம் வலயக்கல்விப் பணிமனையின் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றி ஆசிரியர்கள் பலர் முதலமைச்சரிடம் முறையிட்டதை அடுத்தே முதலமைச்சர் திடீரென கடந்த வெள்ளியன்று வலயக்கல்விப் பணிமனைக்குச் சென்றுள்ளார்.
முதலமைச்சர் சென்ற வேளையில் வலயக்கல்விப் பணிமனையில் சேவையில் இருக்க வேண்டிய பாடங்களுக்குப் பொறுப்பான பதினைந்து உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் காரியாலயத்தில் இருக்கவில்லை. வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட்டுள்ள இரு காரியாலய ஊழியர்களும் வெளியில் தமது சொந்தத் தேவையின் நிமித்தம் சென்றிருந்தனர். பாடசாலை மேற்பார்வையாளர்கள் தொடர்பான அறிக்கைகள் கடந்த மூன்று மாதகாலமாக எந்த ஒரு அதிகாரியாலும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான பல குறைபாடுகள் முதலமைச்சரால் கண்டு பிடிக்கப்பட்டன.
வலயத்திலுள்ள 136 பாடசாலைகளில் மொத்தமாக 3505 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களை வழிநடத்தவென 154 கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை அளவை விட அதிகமாகவும் 200 ஆசிரியர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்திலும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் கல்வித்துறை வளர்ச்சிக்கு பங்காற்ற முடியாதுள்ளது. இக்காரியாலயத்தில் நிலவும் நிர்வாகச் சீர்கேடே இதற்கெல்லாம் காரணம் என இவ்விஜயத்தினை முடித்துக் கொண்ட முதலமைச்சர் தெரிவித்தார்.
காரியாலயச் செயற்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு மாகாணக்கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் தவறு செய்தவர்கள் யாராயினும் எந்தவித தராதரமும் பாராமல் தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.