* வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
எதிர்வரும் தமிழ் - சிங்களப் புத்தாண்டு தினத்திற்கு முன் வவுனியா மாவட்டத்தில் உள்ளக இடம் பெயர்வுக்குள்ளானோர் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு கடந்த எட்டு மாதமாக வழங்கப்படாதுள்ள உலர் உணவு நிவாரண வழங்கலைத் துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரிடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசரத் தொலை நகல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த வருட இறுதிக்காலாண்டு மற்றும் இவ்வருட தொடக்க காலாண்டுகளுக்குரிய 8 மாத காலத்திற்கான, வன்னி மாவட்டத்தில் யுத்தத்தால் இடப்பெயர்வுக்குள்ளானோர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கலில் பெரும் இழுபறி நிலை காணப்படுகிறது.
ஏற்கனவே யுத்தத்தால் உள்ளக இடம் பெயர்வுக்குள்ளானோர் நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கி அவல வாழ்வு நடாத்திவருகின்றார். மேலும் கடந்த மாத பிற்பகுதியில் ஏற்பட்ட அடைமழை, வெள்ளத்தாலும் அவர்கள் சொல்லொணாத் துயரத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
இவ்வாறு வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோரில் நலன்புரி நிலையங்களில் 1231 குடும்பங்களைச் சேர்ந்த 4527 பேரும் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் 17661 குடும்பங்களைச் சேர்ந்த 69644 பேரும் மொத்தமாக 18892 குடும்பங்களைச் சேர்ந்த 74171 பேரும் வசித்து வருகின்றார்கள்.
இத்தொகையுள் 2006 ஜனவரி மாதம் முதல் இவ்வருட மார்ச் வரையான காலப்பகுதியில் `ஏ 9' பிரதான பாதை மூடப்பட்டதன் பின் 70 குடும்பங்களைச்சேர்ந்த 281 பேர் நலன்புரி நிலையங்களிலும் 2983 குடும்பங்களைச் சேர்ந்த 10687 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் இடம் பெயர்ந்து வாழும் எண்ணிக்கையும் உள்ளடங்கும்.
அத்துடன் அரச கட்டுப்பாடற்ற வவுனியா வடக்குப் பிரதேசத்தில் 2115 குடும்பங்களைச் சேர்ந்த 7698 பேரும்; புதிதாக இடம்பெயர்ந்த 539 குடும்பங்களைச் சேர்ந்து 2137 பேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ் எண்ணிக்கையும் வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக இடம் பெயர்ந்தோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்கணக்கெடுப்பானது நடப்பு ஆண்டு மார்ச் மாத இறுதிக்குரியது.
2007, 2008 ஆண்டுகளுக்கான உலர் உணவு வழங்கலுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அதற்குரிய கட்டு நிதி வழங்கப்படாமையும்; ஓமந்தையூடான போக்குவரத்துச் சீர்கேடுமே காரணமாய் அமைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையான நிதி ஒதுக்கீடான 7,880, 996 ரூபாவும்; இவ்வாண்டு முதல் காலாண்டுக்குரிய ஒதுக்கீடு நிலுவையான ரூபா 2,8,55, 816 வும் வழங்கப்படாமலுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபரினால் ஐந்து தடவைகள் புனர்வாழ்வு மற்றும் அனர்த்த சேவைகள் நிவாரண அமைச்சுச் செயலாளருக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் பணிப்பாளருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உலர் உணவுக்கான நிதி வழங்கப்படாமையால் எழுந்துள்ள நெருக்கடிநிலை குறித்தும் இவ்வருடம் பெப்ரவரி மாதம் அரசாங்க அதிபரினால் பணிப்பாளரிடம் நேரில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அரிசி, கோதுமை மாவுக்கான உள்ளூர் கொள்முதலுக்குரிய கேள்வி கோரல் போலன்று, அரச கட்டுப்பாடற்ற பகுதிக்கு எடுத்துச்செல்லப்படும் உலர் உணவுக்கான சீனி மற்றும் பருப்பு வகைகள் கொழுப்பில் வைத்தே அமைச்சால் கேள்வி கோரலில் விடப்பட்டு பின்பு கொள்முதல் செய்யப்பட்டு வவுனியாவிற்கு எடுத்து வரப்படுவதால் பெரும் காலதாமதங்கள் ஏற்பட்டு இடம் பெயர்ந்தோருக்கான உலர் உணவு வழங்கலில்பெரும் பின்னடைவினை எதிர்நோக்குவதாக அரசாங்க அதிபர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய தாமதங்களின் தொடர்ச்சியாக அரச கட்டுப்பாடற்ற பகுதிக்கு பொருட்களை எடுத்துச் செல்வதில் பார ஊர்தி முகவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களும் சேர்ந்து கட்டுப்பாடற்ற பிரதேசத்திற்கான வழங்கலில் பெரிதும் பாதிப்பு நேர்ந்துள்ளது.
இதனைத் தவிர்க்க, அரச கட்டுப்பாடற்ற பகுதிக்கான சீனி மற்றும் பருப்பு வகைகளின் கொள்முதலினை வவுனியாவிலேயே மேற்கொண்டால் இத்தகைய கால விரயத்தைக் குறைக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தமிழ் - சிங்களப் புத்தாண்டு வருவதாலும் இடம் பெயர்ந்தோரின் மிக மோசமான பொருளாதர நிலைமையினையும் கருத்திற்கொண்டு இவர்கட்கும் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்குமான உலர் உணவு வழங்கலினைத் துரிதப்படுத்திட உரிய நடவடிக்கையினை விரைவாக மேற்கொண்டு உதவுமாறு கோரியுள்ளார்.