அமைச்சர் பெ.சந்திரசேகரனின் பணிப்புரைக்கிணங்க, சமுதாய அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சு தோட்டத்துறைசார்ந்த சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு தலைமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான இருநாள் வதிவிடப் பயிற்சி நெறியினை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சின் பணிப்பாளர் எஸ்.விஜேசந்திரன் மேற்கொண்டு வருகிறார்.
மேற்படி திட்டத்திற்கமைய ஒவ்வொரு பயிற்சி நெறியிலும் 60 பங்குபற்றுனர்கள் என்ற அடிப்படையில் 10 செயலமர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் 600 தோட்டத்துறை சார்ந்த சமூகத் தலைவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு கட்ட அடிப்படையில் 2008 ஆம் ஆண்டில் 5 செயலமர்வுகளும் 2009 ஆம் ஆண்டில் 5 செயலமர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
இவ்வருடத்தில் நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு செயலமர்வுகளும் மற்றும் பதுளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு செயலமர்வும் நடத்த திட்டமிட்டுள்ளது.
சமுதாய அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சானது பேராதனை பல்கலைக்கழக மனிதவுரிமை நிலையத்துடன் ஒன்றிணைந்து மேற்படி செயலமர்வை நடத்த உள்ளது. மேலும், பயிற்சியின் முடிவில் மேற்படி கற்கை நிலையமானது பங்குபற்றுனர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்க உள்ளது.
இச்செயலமர்வின்போது "மனித உரிமையும் அடிப்படை உரிமையும்", "தொழிலாளர் உரிமையும் சர்வதேச தொழில் நிறுவன செயற்பாடும்", "சமுதாய அபிவிருத்தியில் சிவில் சமூகத்தினரது பங்களிப்பும் சமூகத்தலைவர்களின் பொறுப்பும்" போன்ற விடயங்களில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இப்பயிற்சி செயலமர்விற்கு சமூகத் தலைவர்கள் என்ற அடிப்படையில் தொழிற்சங்கத் தலைவர்கள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சமூக நடவடிக்கையாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். எனவே, மேற்குறிப்பிட்ட தகுதியினை உடையவர்களிடமிருந்து இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்கள் இம்மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னதாக எஸ்.விஜேசந்திரன், பணிப்பாளர் ஆய்வு அபிவிருத்தி பிரிவு, சமுதாய அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சு, இல.35ஏ கலாநிதி என்.எம்.பெரேரா மாவத்தை, கொழும்பு-08 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.