* பேராசிரியர் கரீம் தெரிவிப்பு
தெற்காசிய நாடுகளில் இலங்கையின் கல்வித்தரம் பின்னடைந்துள்ளதாகத் தெரிவிக்கும் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.கரீம் பாடசாலைகளின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் கண்டியில் நடைபெற்ற இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
இலங்கையில் முஸ்லிம்களிடம் தான் அதிகளவு சர்வதேச பாடசாலைகள் உள்ளன. இவை பெரும்பாலும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தனிநபர்களினால் நடாத்தப்படுவதால் முஸ்லிம் சமூகத்திற்கு இப்பாடசாலைகள் சாபக்கேடாக மாறியுள்ளன.
உலகில் தனிநபர்களால் எங்கும் பாடசாலைகள் நடாத்தப்படுவதில்லை. தனிநபரினால் பாடசாலையொன்றை நடாத்த முடியுமா என்பது சிந்தனைக்குரிய விடயமாகும்.
தற்போது தெற்காசிய நாடுகளில் இலங்கையின் கல்வித்தரம் பின்னடைந்துள்ளது. நாம் பங்களாதேஷை விடவும் பின்னடைந்த நிலையிலுள்ளோம்.
முன்பு இலங்கை ஆசிரியர்களுக்குப் பிற நாடுகளில் கிராக்கி நிலவியது. ஆனால், தற்போது அந்நிலை இல்லை.
பாடசாலைகளின் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். பாடசாலைகளை தரம் 1 முதல் 5 வரையும், தரம்6 முதல் 11 வரையும் மற்றும் உயர்தர 12 ஆம் 13 ஆம் வகுப்புகளையும் கொண்ட தனித்தனிப் பாடசாலைகளாக மாற்றியமைக்க வேண்டும்.
இதனால், பாடசாலைகளில் நிலவும் வளப்பற்றாக்குறை, பாடசாலை அனுமதி உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை எட்டலாம். ஆனால், பழைய மாணவர் சங்கம் என்ற ஒன்று சகல பாடசாலைகளிலும் இருக்காது. இதனால், முன்பும் பழைய மாணவர் சங்கங்கள் இம்முறையை எதிர்த்தன.
பாடசாலை அதிபர்கள் தம்மிடமுள்ள வளங்களை சிறப்பாக முகாமை செய்யும் திறமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் பல்கலைக்கழகங்களில் மாணவர் வெற்றிடங்கள் பல நிரப்பப்படாமலுள்ளன. தென்கிழக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத மாணவர் வெற்றிடங்கள் அதிகமாகும்.
இது பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களைப் பெரிதும் பாதிக்கின்றது. மாணவர்களுக்குப் பாடநெறித் தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருப்பதும் இதற்குரிய முதன்மைக் காரணமாகும் என்றார்.