* பிரிட்டிஷ் தூதுக் குழுவிடம் 3 தமிழ் கட்சிகள் வேண்டுகோள்
பி.ரவிவர்மன்
தொடரும் யுத்த நடவடிக்கைகளை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேச சமூகமும் பிரிட்டிஷ் அரசாங்கமும் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற குழுக்களின் அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த நான்கு பிரதிநிதிகளுக்கும் மூன்று தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்குமிடையே கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஹோல்பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம் பெற்ற இந்தச் சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.- பத்மநாபா) யின் சிரேஷ்ட முக்கியஸ்தர் என்.ஷ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எந்தவொரு தீர்வையும் காண முடியா நிலையில் இழுபட்டுச்செல்லும் இலங்கையின் இன நெருக்கடித்தீர்வு முயற்சிகள் தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் எவ்வாறான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது தொடர்பான அறிக்கையொன்றை சமர்பிப்பதற்காகவே இலங்கைக்கு விஜயம் செய்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களின் அபிப்பிராயங்களை பெற்று வருவதாகவும் பிரிட்டிஷ் அனைத்து கூட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று தமிழ்க் கட்சிகளுடனான இந்த சந்திப்பு தொடர்பாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசத்தில் மட்டுமல்ல நாட்டின் சகல பகுதிகளிலும் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடியான பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர்.
தொடரும் இவ்வாறான நெருக்கடியான நிலைமைகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமெனில் நிரந்தரமானதும் நீதியானதுமான அரசியல் தீர்வொன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கு சர்வதேச சமூகத்தின் காத்திரமான பங்களிப்பு அவசியமானதொன்றாகும்.
விடுதலைப்புலிகளுடன் மட்டுமல்ல சகல தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்து பேசுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு நீதியானதும் நேர்மையானதுமான அரசியல் தீர்வொன்றை எட்ட முடியும்.
அதேநேரம் தென்னிலங்கையில் ஆட்சியதிகாரத்திலிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் இன நெருக்கடி தீர்வு முயற்சிகள் தொடர்பான வெவ்வேறு கருத்துக்களை கைவிட்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு முதலில் முன்வரவேண்டும் அதற்கான அழுத்தத்தையும் சர்வதேச சமூகமே வலியுறுத்தி முன்னெடுக்க வேண்டும்.
இன நெருக்கடிக்கு நீதியானதும் நேர்மையானதுமான தீர்வொன்று காணப்படாவிட்டால் இலங்கையில் அமைதியை உருவாக்க முடியாது. எனவே சர்வதேச சமூகம் தான் அதற்கான காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமென்றும் இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்திக் கூறப்பட்டதாகவும் புளொட் தலைவர் சித்தார்த்தன் மேலும் தெரிவித்தார்.