இலங்கையில் பணவீக்கம் அதிகரித்துச் செல்வதற்கான காரணங்களை விளக்கி, மத்திய வங்கியின் புள்ளி விபரத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை காரணங்காட்டி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
அதிகரித்துச் செல்லும் இந்த பணவீக்கத்தின் போக்குகள் சர்வதேச நாடுகளின் அக்கறைக்குரிய ஒருவிடயமாக மாறியிருப்பதுடன், குறிப்பாக மூன்று காரணிகளால், பணவீக்கம் வளர்ச்சியடைந்து செல்கின்றது.
எல்லாவற்றையும் விட இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நுகர்வின் தேவை அதிகரித்துள்ள நிலைமைகள், அதேபோன்று எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துச் செல்வதால் அதன் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புகள் பணவீக்கத்திற்கான பிரதான காரணங்களாகும்.
இரண்டாவதாக பூகோள ரீதியாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாக, கோதுமை, பாலுணவு உற்பத்தி என்பவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்செய்கை நடவடிக்கைகள் மூலமான விளைச்சல், உற்பத்தியின் அளவு வெகுவாகக் குறைவடைந்தமை காரணமாக அவற்றின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளும் இதற்கான பிரதான காரணமாகும்.
மூன்றாவது எரிபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக சீனி, சோளம், கோதுமை, மக்காச் சோளம் மற்றும் தாவர எண்ணெய் வகைகளின் உற்பத்தியில் ஏற்படுத்திய பாதிப்புகளும் அவற்றினூடான விநியோக நெருக்கடிகளும், பணவீக்கத்திற்கான குறிப்பான காரணங்களாக உள்ளன.
இலங்கையின் பணவீக்கத்துக்கான குறிப்பான காரணிகளில் மேற்குறிப்பிட்ட உற்பத்திகளின் இறக்குமதியில் இலங்கை தங்கியிருக்கின்றமையும் பிரதான காரணமாகும்.
பணவீக்க அதிகரிப்பின் பக்க விளைவுகளாக, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவுகளின் விலைகளில் திடீர் ஏற்ற இறக்கங்கள் அடிக்கடி ஏற்படுவதுடன், நாட்டின் நாணயக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கப்பால், வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் தளம்பல்கள் மற்றும் கடைப்பிடிக்கப்படும் வரிக் கொள்கைகள் காரணமாகவும் பணவீக்கம் வேகமாக அதிகரித்து செல்கின்றது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.