* உயிரிழந்த பணியாளரின் உறவினர் சாட்சியம்
யோ.நிமல்ராஜ்
மூதூரிலுள்ள அலுவலகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அக்ஷன் பாம் ஊழியரான ஜெயசீலன் இறுதியாக பேசும் போது அப்பகுதியைச் சுற்றி இராணுவத்தினர் திரண்டு நிற்பதாக எம்மிடம் தெரிவித்தார் என்று அவரது உறவினர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் நான்காம் திகதி மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தில் அந்நிறுவனத்தில் பணியாற்றிய 17 ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவால் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகின்றது.
இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவரின் சார்பாக அவரது உறவினர் ஒருவர் சாட்சியமளிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
சாட்சி மேலும் தெரிவிக்கையில்;
படுகொலைசெய்யப்பட்ட ஜெயசீலன் என்னுடன் 2006 ஆகஸ்ட் நான்காம் திகதி காலை தொடர்பு கொண்டு பேசினார்.
அதனைத் தொடர்ந்து எனது உறவினர் ஒருவருக்கு வந்த தொலைபேசி அழைப்பின் மூலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டோம்.
அதன்பின்னர் திருகோணமலையில் இருக்கின்ற அக்ஷன் பாம் அலுவலகத்திற்குச் சென்று இச்சம்பவம் தொடர்பாக வினவியபோது அவர்கள் சுகமாக இருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் பதில் கூறினார்கள்.
ஆனால் ஆறாம்திகதி காலை சூரியன் வானொலிச் சேவையில் குறிப்பிட்ட 17 ஊழியர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருகோணமலை அக்ஷன்பாம் அலுவலகத்திற்குச் சென்று விசாரித்த போது உண்மை நிலைமை பற்றி தாம் ஆராய்வதாகவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் கூறினார்கள்.
பின்னர் அன்றய தினம் மாலை மூன்று மணிக்கு திருகோணமலை அக்ஷன்பாம் நிறுவன ஊழியர்கள் இதனை ஒப்புக்கொண்டபோது உடல்களையாவது கொண்டு வந்து தாருங்கள் என்று நாம் கேட்டோம்.
தாம் எவ்வாறாவது உடல்களைக் கொண்டு வந்து தருவதாகக் கூறிய அந்த அலுவலர்கள் எட்டாம் திகதியே சடலங்களை எம்மிடம் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து எட்டாம் திகதி இரவு 1.30 மணியளவில் நான் திருகோணமலை மருத்துவமனைக்குச் சென்று உடல்களை அடையாளங்காண முற்பட்ட போது உடல்கள் சற்று அழுகிய நிலையில் காணப்பட்டது.
ஆனாலும் அவரது உடல் அமைப்பு மற்றும் அவர் கையிலிருந்த பித்தளைக் காப்பையும் கொண்டு அடையாளம் காட்டினேன்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் பகல் 2.30 மணியளவில் உடல் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது அரைமணித்தியாலம் மட்டுமே வீட்டில் வைத்துவிட்டு உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்று புதைத்து விட்டோம்.
நான் அறிந்த வரையில் அவருக்கு எதிரிகளோ அல்லது இலங்கையின் முப்படைகளுடனோ அல்லது அவ்வமைப்புகளின் அங்கத்தவர்களுடனோ எதுவிதமான தொடர்பும் கொண்டிருக்கவில்லை.
அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்புடனோ அல்லது அதன் அங்கத்தவர்களுடனோ எந்தவித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
திருகோணமலையில் இருந்து மூதூருக்குச் செல்வதற்கு கடல் மற்றும் தரை ஆகிய இரு வழிகள் உள்ளன.
தரையிலும் பார்க்க கடல் மார்க்கப் பயணம் குறுகிய தூரத்தையும் நேரத்தையும் எடுக்கும்.
கடலில் படகுமூலம் பயணிப்பவர்கள் கடற்படையிடம் அனுமதி பெறவேண்டும்.
அத்துடன் கடற்படையால் மீன்பிடிப்பதற்கும் அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன.
முதலாம்திகதி மூதூரில் பிரச்சினை ஆரம்பமானதைத் தொடர்ந்து படகுப்பாதை நிறுத்தப்பட்டு, ஓரிரு வாரங்களின் பின்னர் திறக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2006 ஆம் ஆண்டு நான்காம் திகதி அன்று ஜெயசீலன் என்னுடன் பேசுகையில் தமது அலுவலகத்தைச் சுற்றிய பிரதேசங்களில் இராணுவம் நிற்பதாகவும் தாம் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியதுடன், விரைவில் திரும்பி வருவதாகவும் கூறியதாக சாட்சி தெரிவித்தார்.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய திலக் என்பவரையும், பொங்குதமிழ் நிகழ்வுபற்றியும் டொமினிக் என்பவரைப் பற்றியும் தெரியுமாவென இலங்கை இராணுவத் தரப்புச் சட்டத்தரணியான கொமின் தயசிறி விசாரணை செய்தபோது;
திலக்கைப் பற்றித் தனக்குத் தெரியாதெனவும் பொங்கு தமிழ் நிகழ்வு பற்றித் தான் கேள்விப் பட்டிருப்பதாகவும் அதன்போது ஊர்வலங்கள் நடப்பதாக மட்டும்தான் தனக்குத் தெரியுமென்றும் கூறிய அதேவேளை, டொமினிக் என்பவர் தனது சக பணியாளர் எனவும் சாட்சி தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்றைய அமர்வின்போது இடைநிறுத்தப்பட்ட இவரது சாட்சியம் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை தொடர்ந்து இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.