-மன்னார் நிருபர் -
மன்னார் மடுமாதா தேவாலயப் பகுதியில் மிக மோசமான யுத்தசூழ்நிலை உருவாகியுள்ளதையடுத்து அங்கிருந்த திருச்சொ ரூபம் உட்பட பெறுமதியான ஆவணங்கள் என்பன பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் மடுமாதா ஆலய திருச் சொரூபம் உட்பட பெறுமதியான ஆவணங்கள் அங்கிருந்து பாலம் பிட்டி பகுதிக்கு வாகனமொன்றில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மடுமாதா தேவாலய பரிபாலகர் வண.பிதா எஸ்.எமிலியஸ்பிள்ளை, வண.பிதா ஈ. செபமாலை, வண.பிதா அந்தோனி ஞானப்பிரகாசம், வண.பிதா அந்தோனி சகாயம் உட்பட நான்கு கன்னியாஸ்திரிகளும் ஆலய வளாகத்தை விட்டு நேற்று மாலை வெளியேறிச் சென்றுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மடுமாதா தேவாலய வளாகப் பகுதியில் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன.
இச்சம்பவம் காரணமாக அங்கிருந்த மத குருமார்கள், கன்னியாஸ்திரிகள் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் கிணறு ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் மடுமாதா தேவாலயப் பகுதியில் மிக மோசமான தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பும் உறுதிப்படுத்தியுள்ளார்.