* மேன்முறையீடு செய்ய அக்தர் முடிவு
ஐந்து ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தன்னை பலிக்கடாவாக்கிவிட்டதாக அக்தர் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தருக்கு 5 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கொள்கைகளுக்கு எதிராகப் பேசியது மற்றும் இதர நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் தண்டனையை எதிர்த்து அக்தர் 7 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்தது.
இந்தத் தடையால் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தனது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை விளக்குவதற்காக அக்தர் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரை அவரது ஆதரவாளர்கள் தோளில் சுமந்து கொண்டு வந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் நசிம் அஷ்ரப்பை கண்டித்து கோஷங்களை முழங்கிய அவர்கள் அக்தர் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி கையில் சுலோக அட்டைகளையும் வைத்திருந்தனர்.
அக்தர் இது பற்றி நிருபர்களிடம் கூறியதாவது;
" பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நான் தனிப்பட்ட முறையில் பலிக்கடாவாக்கப்பட்டிருக்கிறேன். இந்தத் தடையை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஏனெனில், நான் பெரிய குற்றம் எதுவும் செய்யவில்லை. நான் ஏதேனும் ஒழுங்கீன சம்பவத்தில் ஈடுபட்டிருந்தால் அது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெளிவுபடுத்தி விட்டு அதன் பின் தண்டனையை அறிவித்திருக்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கெதிராக மேன்முறையீடு செய்வேன். கிரிக்கெட் சபை விதிகளை பின்பற்றியே முறையீடு செய்வேன். எனது மேன்முறையீட்டை அவர்கள் நிராகரித்தால் நீதிமன்றம் சென்று நியாயம் பெறுவேன்.
பாகிஸ்தான் நாட்டுக்காக எனது 100 சதவீத பங்களிப்பை அளித்திருக்கிறேன். உடல் தகுதியுடன் இல்லை என்பதற்கும் நடத்தைக்கும் சம்பந்தம் கிடையாது. சில விடயத்தில் நான் பாகிஸ்தான் சபையை எதிர்த்துப் போராடியதால் எனக்குத் தடை விதித்து விட்டார்கள். இந்தத் தடை நியாயமற்றது. இதனை எதிர்த்து போராடுவேன். போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டேன்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக கடுமையான காய்ச்சலிலும் விளையாடியிருக்கிறேன். அதற்கு பாகிஸ்தான் சபை கொடுத்த பரிசு தான் இது.
இதற்கிடையில் அக்தர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் புதிய பிரதமர் யூசுப் ராஷா கிலானி பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசிம் அஷ்ரப்புடன் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது அவர் அக்தர் மீதான தண்டனையை மறு ஆய்வு செய்யும் படி வலியுறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் காவஜா ஆசிப் இது பற்றிக் கூறுகையில்;
" அக்தருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கடுமையானது. இதனை இந்த தேசம் ஏற்றுக் கொள்ளாது. எனவே, பாகிஸ்தான் சபை இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனால், அணிக்குள் பிளவு உண்டாகும். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.
எம்.பி.க்களும் அக்தருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள். ஹனீப் அப்பாசி என்ற எம்.பி. கூறுகையில்;
"அக்தரின் தடையை பாகிஸ்தான் சபை நீக்காவிட்டால் பாராளுமன்றத்தில் பேசி நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம்" என்றார்.