தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இனிங்ஸில் 76 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் காரணமாக விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. மதிய போசன இடைவெளிக்கு முன் இந்தியா சகல விக்கெட்டுகளையும் 20 ஓவர்களுக்குள் இழந்தது.
நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜாபர் 9 ஓட்டங்களுக்கு நிற்னி பந்து வீச்சில் ஸ்மித்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சேவாக் 6 ஓட்டங்களில் ஸ்ரெயின் பந்தில் கிளீன் போல்ட்டானார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் தோனி மற்றும் பதான் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்கள் அடித்தனர். தோனி 14 ஓட்டங்களில் மோர்கல் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பவுச்சரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
சச்சின் டெண்டுல்கருக்கு பதிலாக அணியின் சேர்க்கப்பட்டுள்ள பதான் அதிகபட்சமாக 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காதிருந்தார்.
மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்கள் எடுத்து வந்த வேகத்தில் அரங்கு திரும்பினார்கள்.
இந்திய அணி சார்பில் ஜாபர்- 9, சேவாக்- 6, டிராவிட்- 3, லக்ஷ்மன்- 3, கங்குலி- 0, தோனி- 14, பதான் ஆட்டமிழக்காது- 21, கும்பிளே- 0, ஹர்பஜன் சிங்- 1, ஆர்.பி.சிங்- 0, ஷ்ரீசாந்- 0, உதரிகளாக 19 ஓட்டங்கள் கிடைத்தன.
தென்னாபிரிக்கா தரப்பில் ஸ்ரெயின் 8 ஓவர்களில் 23 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிற்னி 3 விக்கெட்டுகளும் மோர்க்கல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.