யாழ்.குடாநாட்டில் சோளச் செய்கையில் விவசாயிகள் அதிகளவு ஈடுபட்டு வருவதாலும், நல்ல சந்தை வாய்ப்பு இருப்பதாலும் மாதாந்தம் நூறு மெற்றிக்தொன் சோளம் அறுவடை செய்யக் கூடியவாறு நல்லின சோள விதைகளை தருவித்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு யாழ். மாவட்ட கமநல சேவைத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ். மாவட்ட விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் சோளத்தை திருநெல்வேலி அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் கிலோ ஒன்றை 60 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது.
குடாநாட்டில் தற்போது 10 மெற்றிக் தொன் சோளம் உற்பத்தியாகிறது.
யாழ். குடாநாட்டில் சோளப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளக் கூடிய காலநிலையும் மண் வளமும் இருப்பதால் அதனை ஊக்குவித்து விவசாயிகளுக்கு ஐ.நா. அபிவிருத்தி உலக உணவுத் திட்டம், அரச சார்பற்ற நிறுவனமான உலக தரிசன நிறுவனம் என்பன பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது.
உலக நாடுகளில் தானியங்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டு வருவதால் குடாநாட்டில் அதிகளவுக்கு சோளம் பயிரிடுவதன் மூலம் மலிவான விலையில் கால்நடைகளுக்கான உணவுகளை தயாரிக்கவும் அதிக வாய்ப்பும் அதிகரிக்கும்.
அத்துடன் யாழ்ப்பாண விவசாயிகள் அதிக வருமானத்தையும் ஈட்டக்கூடியதாக அமையும் என விவசாய உதவிப்பணிப்பாளர் என்.சிவகுமாரன் தெரிவித்தார்.