* புளொட் தலைவர் சித்தார்த்தன் தெரிவிப்பு
கிழக்கு மாகாண சபை தேர்தலில் பத்மநாபா அணி ஈ.பி.ஆர்.எல்.எப் தமிழர் விடுதலை கூட்டணி, புளொட் அமைப்பு ஆகியன இணைந்து தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பாக இம்முறை போட்டியிடுகின்றனர். தமிழர் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும் என்பதே எமது இலட்சியமாகும். அதுவே நியாயமுமாகும் என்று புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும், மாநகர சபையின் உறுப்பினர் இரா-துரைரத்தினமும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த புளொட் தலைவர் சித்தார்த்தனும் முதலமைச்சர் முதன்மை வேட்பாளர் இரா-துரைரத்தினமும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
தமிழர்களினால் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் தமிழர் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படல் வேண்டும். தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பாக மூன்று கட்சிகள் இணைந்து இத்தேர்தலில் போட்டியிடவுள்ளோம். ஈ.பி.டி.பி. தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச தயாராகவுள்ளோம். ஏனைய இடதுசாரிகட்சிகளுடன் பேசவுள்ளோம். எமது இணக்கப்பாட்டுக்கு உடன்படுமிடத்து அவர்களையும் இணைத்து போட்டியிடுவோம் இல்லையென்றால் நாம் எடுத்த முடிவின்படி போட்டியிட்டு தமிழ் பேசும் மக்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுக்க தயங்கமாட்டோம்.
ஜனநாயகமான நிலை தற்போது கிழக்கில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தாம் விரும்பியவர்கள் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கின்ற நல்ல சூழ்நிலை இங்கு காணப்படுகின்றது. இந்த நல்ல சூழ்நிலையில் நியாயமான நீதியான, சுதந்திரமான முறையில் கிழக்குமாகாண சபை தேர்தல் நடைபெறவேண்டும். அப்போது தான் அது ஒரு ஜனநாயகமான தேர்தலாக அமையும். இதனை அரசாங்கம் உறுதிசெய்யும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
பல்வேறு வழிகளாலும் 1986 ஆம் ஆண்டு முதல் ஆயுதரீதியாக ஏற்பட்ட மோதல்களால் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கான முறையில் அகதிகளாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு அகதி வாழ்க்கை தொடர்கின்ற நிலையே இன்றும் காணப்படுகின்றது. இந்நிலை மாற்றப்படவேண்டும். மக்கள் நிம்மதியாக வாழ்கின்ற நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்.
தமிழரின் அவலநிலையை போக்க கிழக்கு மாகாண சபை தேர்தலை சரியாக நாம் பயன்படுத்த வேண்டும். வடக்கு கிழக்கு சட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட தனியான கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு எமது நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதன் பின்னரே தேவையான தருணத்தில் வட - கிழக்கு இணைப்பை வலியுறுத்துவோம்.
தற்போது ஐந்து இடதுசாரி கட்சிகளும் எமது கூட்டமைப்பு கட்சியோடு இணைந்து போட்டியிட முன்வருவதாக தெரிவித்துள்ளது. முஸ்லிம்களுக்கான உரிமைகளை வழங்கவும், சிங்களவர்களுக்கான உரிமைகளை வழங்கவும் நாம் நியாயமான முறையில் நடந்து கொள்வோம்.
இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கான ஒரு முக்கியமான தமது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தேர்தலாகவே கருதப்படுவதால் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் நமது நம்பிக்கையானவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தமது எதிர்காலத்தை மாற்றியமைக்க முடியுமென்று கூறினர்.