* கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த
கடந்த 16 வருடங்களாக வழங்கப்படாதிருந்த மௌலவி ஆசிரியர் நியமனத்தை மீண்டும் வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரத்தை கடந்த வாரம் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளேன். கூடிய விரைவில் இந்நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரி.ஹாலித் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே கல்வி அமைச்சர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் பிரேமஜயந்த அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டு குழு உட்பட அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், அமீர் அலி, ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரும் இந்நியமனம் குறித்து நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.
கிழக்கு மாகாணப் பாடசாலைகளை அபி விருத்தி செய்யவென உலக வங்கியிடமிருந்து ஆயிரம் மில்லியன் ரூபாவைப் பெற்றுள்ளேன். இதனால் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் துரித கதியில் முன்னேற்றம் அடையவுள்ளன.
நான் மேல்மாகாண முதலமைச்சராக இரு தடவைகள் 5 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். எனது தேர்தல் வெற்றிகளுக்கு மேல்மாகணத்திலுள்ள குறிப்பாக கொழும்பு வாழ் முஸ்லிம்கள் பெரிதும் துணை நின்றிருக்கிறார்கள் என்பதை நன்றியோடு நினைவுகூர விரும்புகிறேன். அதனால் மேல்மாகாண பாடசாலைகளுக்குப் பல கட்டடங்களையும் ஏனைய பௌதிக வளங்களையும் பெற்றுக்கொடுக்க முடிந்தது.
முஸ்லிம்களின் உணர்வுகளை நான் நன்கறிவேன். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாசைகள் எவை என்பதை நான் நன்குணர்கின்றேன். இவ்வபிலாசைகளை உறுதிப்படுத்தும் வண்ணம் நாம் இத் தேர்தலில் செயற்படுவோம் என உறுதியளிக்கிறேன்.
கிழக்கின் உதயம் நிகழ்ச்சித்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் அனைவரும் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றிகொள்ளச் செய்வதன் மூலம் இதன் பெறுபேறுகளை எதிர்காலத்தில் பூரணமாக அனுபவிக்க முடியும். எனவே, காத்தான்குடி முஸ்லிம்கள் அனைவரும் இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்விடயத்தில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், அமீர்அலி, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் உட்படப் பள்ளிவாசல்கள் சம்மேளன உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.