* அமைச்சர் ஜயரட்ன தெரிவிப்பு
இந்நாட்டில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்ற வேறுபாடின்றி சகல இன மக்களும் சகல உரிமைகளையும் அனுபவிக்கும் உரிமையுள்ளவர்களாவர். இனம் என்பதற்கு அப்பால் மனிதன் என்பது உயர்வானதாகும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
கம்பளை கல்கெடியாவ சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் பத்தாண்டு நிறைவையொட்டி அண்மையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; மனிதன் தன் மனச்சாட்சிக்கு விரோதமின்றி செயற்பட வேண்டும். நேர்மையான அரசியலின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். நாம் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாகவும் இருத்தல் அவசியமாகும்.
இலங்கை வளம் பொருந்தியநாடாக இருப்பினும் பயன்படுத்தப்படாத பெருமளவு வளங்கள் காணப்படுகின்றன. மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களுக்கு இலவச உதவிகளை வழங்கிப் பழக்கப்படுத்திவிட்டனர்.
இதனால் மக்கள் மத்தியில் சுயமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து விட்டது. தன்னம்பிக்கை அற்றுப்போகின்றது.
ஜப்பானியர் ஓர் அங்குல நிலத்தில் கூட எவ்வாறு பயன்பெற முடியும் என்று சிந்திக்கின்னர். ஆனால் இலங்கையில் பெருமளவு நிலம் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படாமலுள்ளன.
2000 ஆம் ஆண்டில் அரிசியை ஏற்றுமதி செய்த இலங்கை 2008 ஆம் ஆண்டில் அரிசியை இறக்குமதி செய்யும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படாத நிலங்களை கையேற்று பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருக்கு கையளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இன்று தேங்காயின் விலை உயரும் போதுதான் மக்கள் தென்னங்கன்றுகளை நடவேண்டும் என்று சிந்திக்கின்றனர். எனவே தேங்காயின் விலை உயர்வையிட்டு பெரிதாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் மூலம் நாடெங்கும் பல்வேறு வேலைத்திட்டங்களின் கீழ் எண்பது ரூபாவான தென்னங்கன்றுகள் மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் இலவசமாகப் பசளைகளையும் வழங்குகின்றோம்.
2008 இல் நாடு பூராகவும் ஒரு கோடி தென்னங்கன்றுகளை நடவுள்ளோம் என்றார்.