* ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. தெரிவிப்பு
600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்கதுமான அன்னை மடுமாதாவின் பரிசுத்த திருவுருவச் சிலையைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பாகுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
வன்னி மாவட்டத்தின் மடு பிரதேசத்தில் அமைந்துள்ள கத்தோலிக்கர் மட்டுமல்லாது முழு இலங்கையரதும் பக்திக்கும் கௌரவத்திற்கும் உட்பட்ட மடுமாதா தேவாலயத்தின் அன்னையின் புனித திருவுருவச்சிலை தற்போது அப்பிரதேசங்களில் ஏற்பட்டுவரும் யுத்தமயமான சூழலால் பாதுகாப்பற்ற நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
600 ஆண்டுகள் பழமைவாய்ந்த மடுமாதா திருச்சொரூபம் உலகில் எங்கும் இல்லையென்பதனால் இலங்கைக்கு மட்டுமே சொந்தமான ஒரு தேசிய சொத்தாகும். எனவே, வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா தேவாலயத்தின் திருவுருவச்சிலையை யுத்த அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பது அரசின் பெரும் கடமையாகும். இது கத்தோலிக்கர் மட்டுமல்லாது முழு இலங்கையரதும் அபிலாசையாகுமெனவும் தெரிவித்துள்ளார்.