* பஷீர் சேகுதாவூத்
எம்.ஏ.எம்.நிலாம்
பல்வேறு வியூகங்களின் அடிப்படையிலேயே ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததாக முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான பஷீர்சேகுதாவூத் ஏறாவூரில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர், ஏறாவூரில் அவருக்கு மக்களால் அளிக்கப்பட்ட வரவேற்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அவர் தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது;
எங்களால் உணர்ச்சி பூர்வமாகவும் முடிவெடுக்க முடியும். அறிவுபூர்வமாகவும் முடிவெடுக்க முடியும். உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்படுகின்ற முடிவு தான் நாம் மரச் சின்னத்தில் தனித்து நின்று முகம் கொடுப்பதென்பது அந்த உணர்ச்சிபூர்வமான முடிவினால் கிழக்கு மாகாணத்தை கபளீகரம் செய்ய நினைக்கின்ற அரசாங்கத்தினதும் அதனுடன் இணைந்துள்ள கூட்டத்தினதும் திட்டங்களை முறியடிக்க முடியாது.
இதனை உணர்ந்ததன் அடிப்படையில் அறிவுபூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுதான், இதற்கு எதிராக இன்னுமொரு பலம் பொருந்திய பெரிய கட்சியோடு கூட்டிணைந்து அதாவது அந்தப் பெரிய கட்சி கிழக்கு மாகாணத்தில் சிறிய ஆதரவைக் கொண்டிருக்கின்ற கட்சி என்ற அடிப்படையிலே அதனோடு வருகின்ற கூட்டிலே முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சக்தியாகிய மிளிர முடியும் என்ற நம்பிக்கையிலே அதனைக் கட்டுப்படுத்துகின்ற, எதிர்வரும் காலத்தில் கிடைக்கின்ற அரசியல் அதிகாரத்திலே பெரும் பங்கை ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ள முடியுமென்ற கணக்கீட்டின் அடிப்படையிலே தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்டில் பழம் பெரும் கட்சி, பலம் பொருந்திய கட்சி. ஆனால், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் மாபெரும் சக்தி இந்த இரண்டு பலத்தையும் ஒன்றுபடுத்திக் களமிறங்கியிருக்கின்றோம்.
எனவேதான் இந்தக் கூட்டுக்குத் தேவையான அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் பல வியூகங்களை அடிப்படையாகக் கொண்டு தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றோம்.
இந்தத் தேர்தலில் கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை வென்றெடுப்பதில் நாம் உறுதியான நிலைப்பாட்டுடன் போராட்டக் களத்தில் குதித்திருக்கின்றோம்.
எமது இணைப்பு ஆளும் தரப்புக்கு பலத்த சவாலாக அமைந்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் பஷீர்சேகுதாவூத் தமதுரையில் தெரிவித்துள்ளார்.