* திருகோணமலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்
அரசாங்கத்தின் அராஜகத்தைத் தோற்கடிக்கவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களத்தில் இறங்கியிருப்பதாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தலைமை வேட்பாளர் என்ற முறையில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் மத்தியில் தெரிவித்தார்.
"தேர்தலில் பங்குபற்ற முடியாத நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் அச்சுறுத்தல், பயமுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இச் சூழலில் அரசாங்கம் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்த முனைந்துள்ளது. இத்தேர்தல் நீதி, நியாயமற்றதென்று எமக்குத் தெரிந்துள்ளது. இந்த நிலை முஸ்லிம் மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நாம் களத்தில் இறங்கியுள்ளோம். அராஜகப் போக்கைத் தோற்கடிப்பதே எமது நோக்கமாகும், முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றுவதல்ல" என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பு மனுவில் இரண்டாம் இடத்தை வகிக்கும் முன்னாள் எம்.பி.சின்ன மஹரூப் பேசுகையில்; "அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதில்தான் முனைப்புக் காட்டுகின்றது. தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு அரசாங்கத்தைத் தோற்கடிக்க இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.