எம்.ஏ.எம் நிலாம்
ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பை மீளப்பெறுவது தொடர்பாக சட்ட மா அதிபர் சமர்ப்பித்த மனு தொடர்பில் புதிதாக தீர்ப்பெதனையும் வழங்குவதை உயர்நீதிமன்றம் நேற்றுத் தவிர்த்துக்கொண்டது.
இதனால் ரவூப் ஹக்கீமுக்குரிய பாதுகாப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பில் மாற்றமெதுவும் இல்லை.
இதேவேளை, பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இம்மனு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்; ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமானால் ஹக்கீம் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்து நீதி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்திருக்கின்றார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரவூப் ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸன் அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோர் கடந்த புதன்கிழமை தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜிநாமாச் செய்தனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் வியாழக்கிழமை அரசாங்கம் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் பொருட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தினூடாக உயர்நீதிமன்றத்தின் அனுமதியை கோருவதற்கு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை ஆராய்வதற்கு பிரதம நீதியரசர் தலைமையிலான நீதிபதிகள் குழு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்தது.
இந்த விசாரணையை அவதானிப்பதற்காக ரவூப் ஹக்கீம் தனது சட்டத்தரணிகள் சகிதம் நேற்று உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.
சட்டத்தரணி ஜி.ஜி.அருட்பிரகாசத்தின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் ஆஜராகி மேற்படி மனுத்தாக்கல் குறித்து பிரதம நீதியரசரிடம் ஆலோசனை கேட்டனர்.
இம்மனு தொடர்பில் உயர்நீதிமன்றம் எதனையும் தெரிவிக்காமல் தவிர்த்துள்ளது.
ஆனால், அரசாங்கம் ஹக்கீமின் பாதுகாப்பை குறைக்க அல்லது அகற்றிக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் அவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்து நீதியைக் கோர முடியுமெனவும் பிரதம நீதியரசர் குறிப்பிட்டிருக்கிறார்.