பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் 5 ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்ட சொயிப் அக்தர் ஐ.பி.எல்.போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 18 ஆம் திகதி தொடங்குகிறது. இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர், ஷாருக்கானை உரிமையாளராகக் கொண்ட கொல்கத்தா அணிக்காக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, 3 நாட்களுக்கு முன் அக்தருக்கு ஒழுங்கீன குற்றச்சாட்டுக்காக 5 ஆண்டுகள் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தடை விதித்தது. அதேசமயம் ஐ.பி.எல். போட்டியில் அவர் ஆடலாமென்று பாகிஸ்தான் கிரிக்கெட்சபை தெரிவித்தது.
இந்த நிலையில் ஐ.பி.எல்.போட்டியில் அக்தர் பங்கேற்க முடியாதென்று ஐ.பி.எல்.நிர்வாக் குழுத் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார். மும்பையில் அவர் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறும்போது,
அக்தரை ஐ.பி.எல்.போட்டியில் அனுமதிக்கலாமா என்பது குறித்து ஐ.பி.எல்.நிர்வாகக் குழுவில் ஆலோசனை நடத்தினோம். இதில், `அக்தருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர் மேன்முறையீடு செய்திருக்கிறார். அதுவரை ஐ.பி.எல்.போட்டியில் அக்தரை விளையாட அனுமதிக்க முடியாது என்று நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. அக்தரின் மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஐ.பி.எல்.போட்டியில் சேர்ப்போம்' என்றார்.
ஐ.பி.எல்.நிர்வாக குழு உறுப்பினர் பிந்த்ரா கூறுகையில், `பாகிஸ்தானுக்காக அவர் விளையாட முடியாவிட்டால் அவரை நாங்கள் எப்படி பயன்படுத்த முடியும். அவ்வாறு அவரை நாங்கள் விளையாட அனுமதித்தால், ஆட்டத்தில் நாங்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்காதது போலாகி விடும். இது தவறான முன் உதாரணமாகவும் அமைந்து விடும். நாங்கள் சர்வதேச விதிகளின்படி போட்டியை நடத்த விரும்புகிறோம். அதிலிருந்து விலகமாட்டோம்' என்றார்.