மலையகத் தொழிற்சங்க அரசியற் கட்சிகள் எதிர்வரும் மே தினத்தினை முன்னிட்டு மலையக நகரங்களில் மே தினக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது மே தினக் கூட்டத்தினை அட்டன் நகரில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, மலையக மக்கள் முன்னணியும் தனது மே தினக் கூட்டத்தினை அட்டனில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துள்ளதாக தெரியவருகின்றது.
ம.ம.முன்னணியும் இ.தொ.கா.வும் அட்டன் நகரில் மே தினக் கூட்டத்தினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதால் இந்த இரண்டு அமைப்புகளிடையே முறுகல் நிலை ஏற்படலாமெனத் தெரிய வருகின்றது.
மேலும் அட்டன் நகரில் மே தினக் கூட்டம் நடத்துவதற்கு தமது அமைப்புக்கு அனுமதி மறுக்கப்படுமானால் நீதி மன்றத்தை நாட வேண்டிய நிலைமை ஏற்படுமென மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் இந்தச் சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் தலவாக்கலை நகரில் இடம்பெறவுள்ளது.
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் நானுஓயா நகரில் இடம்பெறவுள்ளது.
இந்த மே தினக் கூட்டத்துக்கு தொழிலாளர் விடுதலை முன்னணியின் டி.அய்யாத்துரையும் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபைத் தமிழ்க் கல்வியமைச்சருமான எஸ்.அருள்சாமியும் தலைமை தாங்கவுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியே வாழுகின்ற மலைகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தனது மே தினப் பொதுக்கூட்டத்தினை இரத்தினபுரி நகரில் ஏற்பாடு செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மே தினப் பொதுக்கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குருநாகல் நகரில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் பொகவந்தலாவை நகரில் இடம்பெறவுள்ளது.