பிரித்தானிய பாராளுமன்ற குழு உறுப்பினரும் சர்வதேச அபிவிருத்தி பேச்சாளருமான அன்ரூ ஜோர்ஜ் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே அவரது விஜயம் இடம்பெற்றது.
புத்தளத்துக்கு வருகை தந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ தலைமையில் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் வாழும் வடபுலத்து இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசும் அரசசார்பற்ற நிறுவனங்களும் வழங்கும் நிவாரணப் பணிகள், கல்வி மற்றும் சுகாதார, தொழில் வாய்ப்புக்கள் பற்றியும் சமூகங்களுடனான உறவுகள் பற்றியும் இச்சந்திப்பின் போது கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, புத்தளம் கோல்டன் முகாம், சலாமாபாத் முகாம்களுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அம்மக்களின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து நேரில் கேட்டறிந்து கொண்டார்.
இலங்கைக்கான விஜயம் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பையேற்று நாம் இங்கு வந்தோம். இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்த நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களதும் தற்போதைய நிலை குறித்து நேரில் கண்டறிந்தோம்.
"இலங்கை வறிய நாடு. இங்கு தேவையானது சமாதானம் மட்டுமே. அந்த சமாதானத்தை அடைந்துகொள்ள நாம் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும். தொடர்ந்து பிரச்சினைகள் காணப்படுமாயின் சமாதானத்தை எட்ட முடியாது. நாட்டின் பெரும்பாலானவர்கள் சமாதானத்தையே விரும்புகின்றனர்.
பல சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களது விடயங்களை கவனித்துவருவது பாராட்டுக்குரியது.
நாம் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் எமது பாராளுமன்றத்தில் இவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளேன்" என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ரூ ஜோர்ஜ் மேலும் கூறினார்.