நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மாலை வேளைகளில் தொடர்ச்சியான அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இடி, மின்னலுடன் கூடிய இந்த அடைமழையால் அடிக்கடி மின்சாரத் தடையும் ஏற்பட்டு வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவை, நோர்வூட், மஸ்கெலியா, அட்டன், டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை போன்ற பிரதேசங்களில் பெய்துவருகின்ற அடைமழையால் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
ஆற்றோரப் பகுதி விவசாயப் பயிர்ச் செய்கைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் பாரிய நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், தோட்டத் தொழிலாளர்கள் தமது வேலைத் தளங்களிலும் இந்த மழையினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, இந்த மழையினால் காசல்ரீ, மவுசாகலை, நோட்டன் பிரிஜ் ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றது.
இந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி, கம்பளை, கண்டி உட்பட பல்வேறு பகுதிகளிலும் மாலை வேளையிலேயே அடைமழை பெய்து வருகின்றது.
நாவலப்பிட்டி பகுதியில் பெய்த அடைமழையினால் நாவலப்பிட்டி ஜயசுந்தர கிராமப் பகுதியில் சில குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
மேலும், மழை வீழ்ச்சி அதிகரிக்கின்றபோது நாவலப்பிட்டி நகரில் கம்பளை வீதி அடிக்கடி வெள்ள நீரில் மூழ்கி விடுவதால் போக்குவரத்துகள் சில மணிநேரத்துக்குத் தடைப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இதேவேளை, இடி, மின்னல் அடிக்கடி ஏற்படுவதால் மின்னிணைப்பு, தொலைத்தொடர்பு இணைப்புகளில் அடிக்கடி தடை ஏற்பட்டு வருகின்றது.
மேலும், கம்பளை, குருந்துவத்தை பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிய மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.