* யுத்த மனநிலையை தோற்கடிக்க முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் யுத்த மனோபாவத்தைத் தோற்கடிக்கும் சிறந்த சாதனமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பயன் படுத்த தமிழர்களும், முஸ்லிம்களும் முன்வர வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதுடன், முஸ்லிம் முதலமைச்சர் குறித்து தமிழர் தரப்பு அச்சப்படத் தேவையில்லையெனவும் சுட்டிக் காட்டியுள்ளது.
இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலி மேலும் தெரிவித்ததாவது;
"கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான முஸ்லிம் காங்கிரஸின் பிரசாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. முழு அளவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட நாங்கள் தீர்மானித்துள்ளோம். சவால் நிறைந்த எமது பயணத்தை ஆயுதக் குழுக்களுக்கோ அல்லது அரச பயங்கரவாதத்திற்கோ அஞ்சி கைவிடத் தயாரில்லை.
தேர்தலானது மிதவாதிகள் கடும் போக்காளர்கள் என்ற இரு தரப்புகளிடையேயானதாக கருதப்படும் நிலையில் மக்கள் தமது வாக்குகளை பெறுமதியானதாக்க வேண்டும்.
இன்றைய அரசாங்கத்தின் யுத்த மனோ பாவத்தை தோற்கடிக்கவும் நில ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த சாதனமாகவுமே நாம் கருதுகிறோம்.
எனவே, முஸ்லிம் முதலமைச்சர் குறித்து எந்தவொரு தமிழ் சகோதரரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம். இங்கு சிங்கள பேரினவாதத்திற்கும் அதற்கு துணைபோகும் சக்திகளுக்கும் இடமில்லையென்பது நிரூபிக்கப்பட வேண்டும்.
இனவாதத்தை தூண்டிவிட முயலும் சில தரப்புகள் ஐ.தே.க. - முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு குறித்தும் முஸ்லிம் முதலமைச்சர் பற்றியும் தவறான பிரசாரத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றன. இப்பிரசாரங்களுக்கு எந்தவொரு தமிழ்க் குடிமகனும் அடிமையாகி விடக் கூடாது.
முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் நலனில் அக்கறைக் கொண்டதும் அச்சமூகத்திற்கு மிகவும் நெருக்கமானதுமாகும். இதன் சாட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மிதவாத தமிழர்களும் உள்ளனர்" என்றார்.