* தேவன்பிட்டி புனித சவேரியார் ஆலயத்தில் மாதா சொரூபம்
மடு தேவாலயப் பகுதியில் நடைபெறும் மோதல்களை இரு தரப்பும் உடனடியாக நிறுத்தவேண்டுமென அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மடுதேவாலயப் பகுதியில் இடம்பெறும் மிகக் கடுமையான யுத்தத்தையடுத்து தேவாலயத்திலிருந்த மடு மாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான தேவன்பிட்டி பகுதியிலுள்ள புனித சவேரியார் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசப் தலைமையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது.
இதில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் வண.விக்ரர் சோசை மற்றும் மறை மாவட்டத்திலுள்ள 35க்கும் மேற்பட்ட பங்குக் குருமார்கள் கலந்துகொண்டு மடு தேவாலய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து சில முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டனர்.
இங்கு மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு;
* மடு தேவாலயத்திலிருந்து பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்ட மாதாவின் திருச்சொரூபம் தொடர்ந்தும் தேவன்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்திலேயே வைக்கப்பட்டிருக்கும்.
* மடு தேவாலயப் பகுதியில் நடைபெறும் யுத்தத்தை சம்பந்தப்பட்ட இரு தரப்புகளும் உடனடியாக நிறுத்தவேண்டுமென அவர்களை கோருவது.
* விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரை முடிந்தால் நாளை திங்கட் கிழமை மன்னார் ஆயர் தலைமையிலான குழுவொன்று சென்று சந்திக்கும்.
* மன்னார் மறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் திருப்பலி பூஜைக்குப் பின் தேவாலயங்களுக்கு வருவோரிடம் கையெழுத்துப் பெறுவது.
* நாளை திங்கட்கிழமை காலை வவுனியா இறம்பைக்குளம் புனித.அந்தோனியார் கோவிலிலிருந்து வவுனியா மாவட்ட செயலகம் நோக்கி சமாதானப் பேரணியும் மகஜர் கையளிப்பதும்.
* மன்னார் மறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமைகளில் விஷேட ஆராதனைகளை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.