தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் கரப்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக,நாடளாவிய ரீதியில் 4 ஆயிரம் கரப்பந்தாட்டத் திடல்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக மேற்படி மன்றத்தின் பணிப்பாளர் சேனாங்க குணரெட்ன தெரிவித்தார்.அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்;
அகில இலங்கை ரீதியில் 4 ஆயிரம் கிராமப்பகுதிகளில், 4 ஆயிரம் கரப்பந்தாட்டத் திடல்களை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின் கீழ், இதுவரை 1800 - க்கும் மேற்பட்ட கரப்பந்தாட்டத்திடல்களை அமைத்துள்ளோம். மிகுதித்திடல்கள் இவ்வருடமுடிவுக்குள் நிறைவடைந்து விடும்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்,பெண் கரப்பந்தாட்ட அணிகள் என்று 8 ஆயிரம் அணிகள் உருவாக்கப்படுவதுடன், கரப்பந்தாட்டப் போட்டிக்கான சீருடைகள் உட்பட,விளையாட்டு உபகரணங்களையும் இலவசமாக வழங்கவும் உள்ளோம்.
இவ் அணிகளிடையே அகில இலங்கை ரீதியில் போட்டிகளையும் நடாத்தவுள்ளோம். இப்போட்டிகளில் சிறந்த வீரர்,வீராங்கனைகளைத் தெரிவு செய்து, எமது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கரப்பந்தாட்டக் குழுவில் இனைத்து விசேட பயிற்சிகளையும் வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம் என்று குணரெட்ன தெரிவித்தார்.