பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பான உடன்படிக்கையொன்றுக்கு வழிவகுக்கும் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு 160க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை இணங்கியுள்ளன. உலகம் வெப்பமடைதல் தொடர்பான புதிய உடன்படிக்கையொன்றை மேற்கொள்வதே தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற ஐந்து நாள் மாநாட்டின் பிரதான நோக்கமாகும். உலகம் வெப்பமடைந்துவருவது தொடர்பான பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வறிய நாடுகளும் செல்வந்த நாடுகளும் இரண்டுபட்டு நிற்கின்றன. வெப்பநிலை அதிகரித்து வருவதால் இந்நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கோடிக்கணக்கான மக்கள் பேராபத்தை எதிர்நோக்குவார்கள் என்பது தொடர்பான அச்சமும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் புவி வெப்பமடைவதற்கு பிரதான காரணகர்த்தாக்களாக செல்வந்த நாடுகளே இருப்பதால் வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கு அந்த நாடுகளே உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசரத் தேவையாகும்.
பாங்கொக்கின் ஐந்து நாள் மாநாட்டின்போது கைத்தொழில்துறை தரம் பேணும் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற யோசனையை ஜப்பான் முன்வைத்தது. இதற்கு எதிராக வறிய நாடுகள் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை இரவே இணக்கப்பாடொன்று எட்டப்பட்டது. அடுத்த வருட இறுதியில் உடன்படிக்கையொன்று பூர்த்தியடைய வேண்டுமெனவும் அந்த இலக்கை நோக்கி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் 160 நாடுகளின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.`சகலருமே தத்தமது நிலைப்பாடுகளிலிருந்து விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ஐ.நா.வின் காலநிலை தொடர்பான இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய ஹரல்ட் டோவ்லான்ட் கூறியுள்ளதுடன் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லமுடியுமெனவும் நம்பிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
புவி வெப்பமடைவதற்கு காரணமான வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டுமென செல்வந்த நாடுகளுக்கு வலியுறுத்தவிருக்கும் கியோட்டோ உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகளும் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை வரவேற்புக்குரியதாகும். விமானப் போக்குவரத்து, கடற்பயணம் என்பவற்றால் ஏற்படும் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு இந்த நாடுகள் சம்மதித்துள்ளன. பொருளாதார நட்புறவு ரீதியாக ஒவ்வொரு தொழிற்றுறையும் வகைப்படுத்தப்பட்டு அவை தொடர்பாக தனித்தனியான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஜப்பான் யோசனை தெரிவித்தமையாலேயே மாநாட்டில் சச்சரவு ஏற்பட்டது. இந்த அணுகுமுறையை கடைப்பிடித்தால் செல்வந்த நாடுகளுக்கே அதிகளவு வாய்ப்பாக அமையுமெனவும் ஏனெனில், தொழில்நுட்பத்துறையில் அந்த நாடுகள் அபரிமிதமான வளர்ச்சி கண்டிருப்பதால் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு சட்ட ரீதியான ஏற்பாடுகளை அந்த நாடுகள் சுலபமாக எதிர்கொள்ள முடியுமெனவும் அதேசமயம் வளர்ந்துவரும் நாடுகள் தரத்தை மேம்படுத்துவதற்கு அதிகளவு தொகையை செலவிட வேண்டியிருக்கும் என்றும் அஞ்சுகின்றன.
ஆனால், இந்த மாநாடு பூமியைப் பாதுகாப்பதற்காகவேயன்றி கைத்தொழில் வளர்ச்சி கண்ட நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அல்ல என்பதை காலநிலை, சக்திவளத்துறை தொடர்பான சர்வதேச ஆலோசகர் டானியல் மிற்லர் என்பவர் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு அழுத்தியுரைத்திருக்கிறார். இதேவேளை, வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்காவை எவ்வாறு உள்ளீர்ப்பது என்பது தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய விடயமும் நகல் வரைபில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. கியோட்டோ உடன்படிக்கையில் அமெரிக்கா கைச்சாத்திடவில்லை. இந்தியா, சீனா என்பன தொடர்பாக எந்தவொரு கோரிக்கைகளையும் விடுக்காமல் தன்னிடம் இது தொடர்பாக வலியுறுத்துவது நேர்மையற்றது என்று அமெரிக்கா கூறிவருகிறது.
பாங்கொக் மாநாட்டில் கலந்துகொண்ட சகலருமே மனித குலத்தின் இருப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எவ்வாறு வெற்றி கொள்வது என்ற மிக முக்கியமான விடயத்தை சாதகமான முறையில் கையாள வேண்டும் என்பதில் அவர்கள் கருத்தொருமைப்பாட்டுக்கு வந்துள்ளனர். ஆனால், அடுத்த ஜனவரியில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எவர் தெரிவுசெய்யப்படுவார் என்பதற்காக இவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில், புஷ்ஷிற்குப் பின் ஜனாதிபதியாக வருவதற்கான எதிர்பார்ப்புகளுடன் உள்ள மூன்று பிரதான போட்டியாளர்களும் புவி வெப்பமடைவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக உறுதியளித்து வருகின்றனர். மானிட குலத்தின் இருப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை உலகின் பெரும்பாலான நாடுகள் சுட்டிக்காட்டியும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி வருகின்ற போதிலும் செல்வந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்கா இந்தக் கோரிக்கைகளுக்கு உளப்பூர்வமான கரிசனை எடுப்பதில்லை என்பதே உண்மையாகும்.
தத்தமது பொருளாதார நலன்களில் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள ஆயத்தமில்லாத நிலையையே அமெரிக்கா போன்ற வல்லரது நாடுகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. இவற்றின் நிலைப்பாட்டில் திருப்பம் ஏற்படாவிட்டால் எந்தவிதமான பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. புவி வெப்பமடைவதற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சர்வதேச உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதற்கு சுமார் 160 நாடுகள் பாங்கொக் மாநாட்டில் இணக்கப்பாடு கண்டுள்ளமை குறித்து இந்த விடயங்களில் கரிசனை கொண்டுள்ள விஞ்ஞானிகள் சங்கத்தின் பணிப்பாளரான அல்டன் மேயர் என்பவர் தெரிவித்துள்ள கருத்து உண்மையிலேயே யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. `சாப்பாட்டுக்காக மேசை தயாராக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான (சாப்பாட்டுக்கான) உண்மையான ஆயத்தம் இன்னமும் இல்லை' என்பதே அவர் கூறிய சிந்திக்கவைக்கும் விமர்சனமாகும். ஆகவே, மிகப்பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தினால் ஏற்படவுள்ள ஆபத்தைத் தடுப்பதற்கு உலக வரைபடத்திலுள்ள சகல நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே யாவரினதும் எதிர்பார்ப்பாகும்.