அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனும் அவரது மனைவி ஹிலாரி கிளின்டனும் கடந்த 8 ஆண்டுகளில் 109 மில்லியன் டொலர்கள் பணத்தை சம்பாதித்துள்ளதாக அவர்களால் வெளியிடப்பட்டுள்ள வருமான வரிக் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களால் வெளியிடப்பட்ட இவ்வருமான வரிக்கணக்கில் 33.8 மில்லியன் டொலர்களை வருமான வரியாகவும் 10.2 மில்லியன் டொலர்களை நன்கொடையாகவும் வழங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் அதிகமாக வரி செலுத்துவோர் பட்டியலில் அவர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் புத்தகங்களை எழுதி இந்தப் பணத்தை சம்பாதித்துள்ளனர். பில் கிளின்டன் அடிக்கடி பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றியதன் மூலம் அதிகமான பணம் சம்பாதித்துள்ளார். ஒவ்வொரு பொதுக் கூட்டத்திற்கும் 2 இலட்சத்து 50,000 டொலர் வாங்குவாராம் கிளின்டன்.
2000 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார் கிளின்டன். அப்போது அவரிடம் 3,50,000 டொலர் மட்டுமே இருந்தது. 2001 ஆம் ஆண்டில் வருமானம் 16 மில்லியன் டொலராக அதிகரித்தது. புத்தகம் எழுதியே கணவனும் மனைவியும் ரூபா 92 மில்லியன் டொலர் ஈட்டியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
கடந்த 30 ஆண்டுகளில் தங்களது வருமானம் பற்றிய விவரங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள மிகச் சிலர் மட்டுமே இவ்வளவு வெளிப்படையாக தங்கள் வருமானம் பற்றிய விபரங்களை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
`எனது வாழ்க்கை' என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் எழுதிய சுயசரிதை புத்தகம் மூலமாக அவருக்கு 23 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்ததாம். `வாழும் வரலாறு' என்ற தலைப்பில் அவரது மனைவி ஹிலாரி கிளின்டன் புத்தகம் எழுதி விற்றார். அதன் மூலம் அவருக்கு 10 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்ததாம்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடத் தகுதியானவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு அந்நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நடந்து வருகிறது.
பராக் ஒபாமா, ஹிலாரி கிளின்டனை விட முன்னிலையில் இருக்கிறார். தனது வருமான விவரத்தை வெளியிட்ட அவர் இதுபோல வருமான விவரத்தை வெளியிட முடியுமா என்று ஹிலாரி கிளின்டனுக்கு சவால் விட்டார். இதையடுத்து தற்போது ஹிலாரி கிளின்டனும் அவரது கணவர் பில் கிளின்டனும் தங்கள் வருமான விவரத்தை வெளியிட்டுள்ளனர்.