அமெரிக்காவை தாக்குவதற்காக அணுவாயுதத் தொழில்நுட்பத்தை அல்-ஹைடா வாங்க முயற்சித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தங்கள் பாதுகாப்புக்காக அணுவாயுதத் தொழில்நுட்பத்தை பெற பல நாடுகள் விரும்புகின்றன. ஆனால், அணுவாயுதத் தாக்குதல் நடத்த அல்-ஹைடா பயங்கரவாதிகள் விரும்புகின்றனர். அதற்காக அணுவாயுதத் தொழில்நுட்பத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதே அவர்களது திட்டம் என்று அமெரிக்க உளவுத்துறையின் மூத்த அதிகாரி சார்லல் ஆலன் அமெரிக்க எம்.பி. க்களிடம் தெரிவித்துள்ளார்.
அல்-ஹைடா பயங்கரவாதிகளின் அமெரிக்காவைத் தாக்கும் பல திட்டங்களில் அணுவாயுதத் தாக்குதலும் ஒன்று. நியூயோர்க்கில் பல மாடிக் கட்டிடத்தில் விமானத்தை மோதி கட்டிடங்களை தகர்த்தனர் அல்-ஹைடா அமைப்பினர். அத்தாக்குதலில் மிகச் சிலர் மட்டுமே ஈடுபட்டனர்.
அதேபோன்று அணுவாயுதத் தாக்குதலிலும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த மிகச் சிலர் மட்டுமே ஈடுபடுவர். அணுவாயுதத் தொழில் நுட்பத்தைப் பெறுவதற்காக ஏற்கெனவே சில வல்லுநர்கள் அந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கக் கூடும். எனவே நாம் இதுவரை சந்திக்காத புதிய வழியில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. அதைக் கண்டுபிடித்துத் தடுக்க வேண்டியது எமது கடமை என அவர் தெரிவித்தார்.
மேலும் ,அணுவைப் பிளக்கும் கருவி இல்லாமல் அணுவாயுதம் தயாரிக்க முடியாது. எனவே அல்-ஹைடா பயங்கரவாதிகள், அணுவாயுதத்தைத் திருடியோ அல்லது யாரிடமாவது கள்ளத்தனமாக வாங்கியோ அதனை அவர்கள் பயன்படுத்தக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.