* ரூம் ரூ ரீட் அமைப்பின் திட்டப் பணிப்பாளர்
"பாடசாலைகளில் சகல வசதிகளுடன் கல்வி கற்பதற்கு எமது அமைப்பின் மூலம் கட்டிடங்களும் புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எமது சேவை கற்பிட்டி தொடக்கம் வென்னப்புவ வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரூம் ரூ ரீட் (அறைக்குள் வாசிப்பு) அமைப்பின் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஐ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
புத்தளம் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட கடையாமோட்டை, முந்தல் பிரதேசங்களிலுள்ள சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் மகா வித்தியாலங்களில் பாடசாலை கட்டிடங்களை வைபவ ரீதியாக திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திட்டப் பணிப்பாளர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;
"எமது அமைப்பின் மூலம் ஐந்து வகையான வேலைத் திட்டங்கள் அமுல் செய்யப்பட்டு வருகின்றன. பாலர் பள்ளிகள் மற்றும் பாடசாலைகளுக்கான கட்டிடங்களை அமைத்தல், மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல், நூலகங்களை அமைத்தல், உள்நாட்டில் உள்ள மொழிகளில் நூல்களை அச்சடித்து இலவசமாக மாணவர்களுக்கு வழங்குதல் என்பனவையே அவையாகும்.
ஆகவே, இவைகளை நாம் வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் கல்வி கற்ற சமூகமாக விளங்கி அச்சமூகத்தின் ஊடாகவே உலகத்தை மாற்ற முடியும். எமது அமைப்பு 8 நாடுகளில் இயங்கி வருகின்றது. 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை 107 பாலர் பாடசாலைகளும், 245 நூலகங்களையும் அமைத்து கொடுத்துள்ளோம். புத்தளம் மாவட்டத்தில் 65 நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புத்தளம், நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உள்ள 300 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆகவே, எமது அமைப்பு கல்வியை வளர்ச்சியடைய செய்வதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இவ்வைபவத்தில் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் தர்ஷன ரத்நாயக்க, மற்றும் புத்தளம் மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர் முகமட் நிலாம் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.